Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்தை ஜூலைக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்..!!

சென்னை : கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்தை ஜூலைக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தாம்பரம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக பேருந்து முனையம் கட்டப்பட்டது.

புதிய பேருந்து முனையத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி செல்லும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2024 முதல் தொடங்கியது.

ரயில் நிலையத்தில் இரண்டு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஒரு நடைமேடை அமைக்கும் பணி முடிந்த நிலையில், 2வது நடைமேடை கட்டும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ரயில் நிலைய பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனினும், ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆகாய நடைபாதை என்பது ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரடியாக ஜிஎஸ்டி சாலையை அணுகாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. ஆகாய நடைபாதை, ரயில் நிலையத்தில் இருந்து சாலையை அணுகுவதற்கான பாதைகளை அமைப்பதில் தொய்வு ஏற்பட்டு இருப்பதால், புதிய ரயில் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது; கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய பணிகள் 80% நிறைவு பெற்றுவிட்டன. 2வது நடைமேடை பணிகளும் விரைவில் முடிவடைந்துவிடும். மாநில அரசு ஆகாய நடைபாதையை ரயில் நிலையத்துடன் இணைத்தால் மட்டுமே ரயில் நிலைய திறப்பு சாத்தியமாகும். அந்த பணிகள் ஜூலை மாதத்துக்குள் முடியும் என கூறியிருக்கிறார்கள். அதுவும் நிறைவுபெற்றால், ஜூலை மாதத்திற்குள் ரயில் நிலையம் திறக்கப்படும் என்றார். முன்னதாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கடந்த மே மாதத்தில் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதம் என அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.