கோவை: கோவையில் ரூ.133 கோடியில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கோவை சிறை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைகிறது. செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் வரும் மே மாதம் நிறைவடையும்.
தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை அறிய மாவட்டம் வாரியான கள ஆய்வை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கினார்.
இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விளாங்குறிச்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ரூ.158 கோடியே 32 லட்சம் மதிப்பில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு மென்பொருள் நிறுவனங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று களஆய்வை தொடங்கிய முதல்வர் கோவையில் ரூ.133 கோடியில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்தார். செம்மொழி பூங்கா மாதிரியை பற்றி அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கினார். கோவை சிறை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் இந்த செம்மொழி பூங்கா அமைகிறது. இதன் பணிகள் வரும் மே மாதம் நிறைவடையும் என்று தகவல் தெரிவித்தனர்.
இந்தியாவிலேயே தனித்துவத்துடன் பல சிறப்புகளை உள்ளடக்கியிருக்கும். இப்பூங்காவில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம்தரும் வனம், நறுமண வனம் போன்ற பல வகையான தோட்டங்கள் அமைக்கப்படும். இதில் இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம், அனைத்து நவீன வசதிகளுடன் ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம் ஆகியவைகளும் அமைக்கப்படும்.


