நாராயண்பூர்: சட்டீஸ்கரில் தலைக்கு ரூ.37லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த 22 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். சட்டீஸ்கரில் நக்சல் இயக்கத்தில் இருந்து விலகி கிராமத்திற்கு திரும்பும் திட்டம் குறித்த அரசின் பிரச்சாரத்தின் கீழ் ஈர்க்கப்பட்டு நக்சல்கள் சரண் அடைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று நாராயண்பூர் மாவட்டத்தில் 22 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் குதுல், நெல்னார் மற்றும் இந்திராவதி பகுதியை சேர்ந்த நக்சல்கள். எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல் அதிகாரிகள் முன் 22 நக்சல்களும் நேற்று சரண் அடைந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பிற்குள் உள்ள மாவோயிஸ்ட் கொள்கை மற்றும் அமைப்புக்குள் வளர்ந்து வரும் வேறுபாடுகள் காரணமாக ஏமாற்றமடைந்ததால் சரண் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சரண் அடைந்தவர்களின் தலைக்கு மொத்தம் ரூ.37.5லட்சம் சன்மானம் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சரண் அடைந்த அனைத்து நக்சல்களுக்கும் தலா ரூ.50ஆயிரம் வழங்கப்பட்டு அரசின் கொள்கையின்படி அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement


