டெல்லி: 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என FIDE அறிவித்துள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான FIDE செஸ் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளதாக உலக சதுரங்க நிர்வாகக் குழுவான FIDE அறிவித்துள்ளது. செஸ் உலகக்கோப்பை போட்டி நடைபெறும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். 2026 FIDE வேட்பாளர்கள் போட்டிக்கான தகுதிப் போட்டியாக செயல்படும் இந்த மதிப்புமிக்க போட்டியில் மொத்தம் 206 வீரர்கள் போட்டியிடுவார்கள்.
இந்தத் தொடரில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் 2026ம் ஆண்டு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவார்கள், இது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு சவாலாகும் வீரரைத் தீர்மானிக்கும். இதற்கு முன்பு இந்தியா 2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் செஸ் உலகக் கோப்பையை நடத்தியது, அதில் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை வென்றார். சர்வதேச அரங்கில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சாதித்து வரும் நிலையில், உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது அதற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அமைந்துள்ளது.
நடப்பு உலக சாம்பியனான குகேஷ், 2023 உலகக் கோப்பையின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா, தற்போது உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசி ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களில் அடங்குவர். இந்த நிகழ்வை நடத்தும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என FIDE தெரிவித்துள்ளது. இந்த முறை, எந்த நகரத்தில் போட்டி நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் புது டெல்லி, சென்னை, பெங்களூரு, அல்லது அகமதாபாத் ஆகியவைற்றில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.