Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலைய ஓடுபாதையில் இயந்திர கோளாறால் நின்ற துபாய் விமானம்: 312 பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 9.50 மணியளவில் 312 பயணிகள், 14 விமான ஊழியர்கள் என மொத்தம் 326 பேருடன் துபாய்க்கு செல்லும் எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் துவங்குவதற்கு முன், நிற்கும் இடத்தில் இருந்து டாக்சி வே, டி-1 பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து அந்த விமானத்தை அவசரமாக டாக்சி வேயில் நிறுத்திவிட்டு, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஓடுபாதையின் டாக்சி வேயில் நின்றிருந்த துபாய் விமானத்துக்கு பொறியாளர்கள் மற்றும் தரைதள பராமரிப்பு ஊழியர்கள் விரைந்து வந்தனர். மற்ற விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல், துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் டாக்சி வேயின் ஓரமாக தள்ளிக்கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்துக்குள் பொறியாளர்கள் ஏறி, அதன் பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். துபாய் செல்ல வேண்டிய 326 பேரும் விமானத்திலேயே அமரவைக்கப்பட்டனர்.

தற்போது வரை துபாய் விமானத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இன்று காலை துபாய் செல்ல வேண்டிய 312 பயணிகளும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விமானத்தில் அமர்ந்தபடி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்ததால், பெரும் ஆபத்திலிருந்து 312 பயணிகள் உள்பட 326 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.