சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வழக்கின் வேகத்தை தாமதப்படுத்தும்: அமைச்சர் ரகுபதி
சென்னை: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வழக்கின் வேகத்தை தாமதப்படுத்தும், சிபிஐ விசாரணையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பது மேலும் தாமதமாகும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு பயந்துபோய் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டாம் என தடை உத்தரவு வாங்கிய பழனிசாமி இன்று சிபிஐ விசாரணை கோருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. அரசின் மேல்முறையீட்டு முடிவை எதிர்த்து மலிவு அரசியல் செய்யும் பழனிசாமிக்கு வன்மையான கண்டனம்.
பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி கிடைப்பதில் அக்கறை இல்லாத பழனிசாமி விஷச்சாராய மரணங்களை வைத்து அருவருக்கத்தக்க அரசியல் செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுதருவதற்காகவே தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.


