பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவில், விவசாய கூலி வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த மார்ச் 26ம்தேதி, அவர்களது 16 வயதுடைய 2வது மகள், அதே ஊரை சேர்ந்த தங்கவேல் மகன் மணி (எ) நிர்மல்குமாருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்ததை கண்டறிந்த சமூக நலத்துறை அலுவலர், இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வீரம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீரம்மாள், 18 வயது ஆவதற்கு முன்பாக, மகளை திருமணம் செய்து கொடுத்ததற்காக, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருக்க, சிறுமியின் தாயிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதை சிறுமியின் தாய், நேற்று மகளிர் காவல் நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் வீரம்மாளை (50) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
* பறிமுதல் செய்த ரூ.75,000 அபேஸ் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த அம்மணியம்மாளிடம் (60), பைக்கில் லிப்ட் தருவதாக அழைத்து சென்று பிரபாகரன் (39) என்பவர் 3 பவுன் செயின், ரூ.75 ஆயிரத்தை பறித்துள்ளார். புகாரின்படி ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து பிரபாகரனை கைது செய்து, 3 பவுன் செயின் மற்றும் ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ஆனால், பிரபாகரனிடம் கைப்பற்றப்பட்ட ரூ.75 ஆயிரத்தை கணக்கில் கொண்டுவராமல் இன்ஸ்பெக்டர் பிருந்தா, கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பிருந்தாஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பிருந்தா கடலூர், கரூர் மாவட்டங்களில் பணியாற்றிய நிலையில், பல்வேறு புகார்கள் பணி ரீதியாக இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிருந்தாவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உமா உத்தவிட்டார்.