திருச்சி: பாஜக என்ற எலி பொறிக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். திருச்சியில் அவர் இன்று அளித்த பேட்டி: தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். யாரிடமிருந்து தமிழகத்தை மீட்க போகிறார் என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும். அவர் பாஜக என்ற எலி பொறிக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார்.
பாஜவுடன் கூட்டணி வைத்ததை அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்று கொள்ளவில்லை. பாஜவிடமிருந்தும், அதிமுக தொண்டர்களிடமிருந்தும் தன்னை காத்து கொள்ள எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிமுகவில் அன்வர் ராஜா மட்டுமல்ல பல தலைவர்கள் பாஜவுடன் கூட்டணி வைத்ததை விரும்பவில்லை. சிலர் வெளிப்படையாக அதை கூறுகிறார்கள். சிலர் வெளிப்படையாக கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


