Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்று சுழற்சி உருவாகும் தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வாளர்கள் தகவல்

சென்னை: மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், காற்றை குளிர்விக்கும் காற்று சுழற்சிகள் வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்புள்ளதாலும் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக எதிர்பார்த்த வகையில் வடகடலோரத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்துள்ளது. இன்றும் வடகடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகள் மற்றும் ஆந்திர எல்லையோரம் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்று கூடுதல் பரப்பில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பகுதியில் இருந்து ஒரு காற்று சுழற்சி வந்து இங்கு இணையும் வாய்ப்பும் உள்ளது. அதனால் மழை பொழிவு தீவிரம் ஆகும். பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றும் இணைந்து குளிர்விப்பு அதிகரித்து 14ம் தேதிக்கு பிறகு 20ம் தேதி வரை பலத்த மழை பெய்யும். காற்றை குளிர்விக்கும் வகையில் காற்று சுழற்சிகள் வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதனால் வடக்கு மாவட்டங்கள் தொடங்கி தென் மாவட்டங்களுக்கும் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காரணமாக சென்னை, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், கோவை, நீலகிரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். இதேநிலை 15ம் தேதி வரை நீடிக்கும். இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.

சென்னையில் நேற்று 102 டிகிரி வெயில் நிலவியது.

இன்றும் அதே அளவில் வெயில் இருக்கும். மாலையில் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்று முதல் 13ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். மேலும், மத்திய மேற்கு வங்கக் கடலின் அனேக பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு, தென்மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும்.