திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யாவுக்கும் (24),கைகாட்டி புதூர் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27)என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 28ம் தேதி ரிதன்யா காரில் இருந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேவூர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையே ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் ரிதன்யா மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவரது உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக “ஜஸ்டிஸ் பார் ரிதன்யா” என்ற மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


