Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிஎஸ்பி கொலை முயற்சி வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை: ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு

மதுரை: டிஎஸ்பியை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தென்காசி ஹனீபாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 2011ல் தமிழ்நாட்டில் ரதயாத்திரை மேற்கொண்டார். அப்போது மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டி அருகே பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைத்து அவரை கொல்ல முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில் தொடர்புடைய முகம்மது ஹனீபா (எ) தென்காசி ஹனீபா, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பதுங்கி இருந்தபோது அவரை பிடிக்க சென்ற எஸ்ஐடி டிஎஸ்பி கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்றார்.

இதுதொடர்பாக வத்தலகுண்டு போலீசார் தொடர்ந்த கொலை முயற்சி வழக்கில், திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தென்காசி ஹனீபாவை விடுவித்தது. இதை எதிர்த்து சிபிசிஐடி-எஸ்ஐடி கூடுதல் எஸ்பி தரப்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தென்காசி ஹனீபாவுக்கு தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக ஒத்திவைத்திருந்தனர். இதன்படி நேற்று நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் தென்காசி ஹனீபா, ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள், ‘‘உங்களை விடுவித்ததை எதிர்த்த வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீங்கள் குற்றவாளி என முடிவு செய்துள்ளோம்’’ என்றனர். அப்போது தென்காசி ஹனீபா, ‘‘இது பொய் வழக்கு. ஏற்கனவே 4 ஆண்டுகள் வரை சிறையில் இருந்துள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை சாட்சியம் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் உங்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொள்ள வேண்டுமென உத்தரவில் கூறியுள்ளனர்.