ஸோலோ: ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக, மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த தன்வி சர்மா, வெண்ணலா கலகோட்லா வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஸோலோ நகரில் நடந்து வருகின்றன.
மகளிர் பிரிவில் நேற்று நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வெண்ணலா கலகோட்லா, சீன வீராங்கனை ஸி யா லியு மோதினர். 37 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனை வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா, சீன வீராங்கனை யின் யி க்விங் மோதினர்.
35 நிமிடங்களே நடந்த இப்போட்டியில் சீன வீராங்கனை யின், 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனைகள் தன்வி, வெண்ணலா ஆகிய இருவருக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய ஜூனியர் பேட்மின்டன் வரலாற்றில் முதல் முறையாக ஒரே சமயத்தில் இரு இந்திய வீராங்கனைகள் பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் முறை.