Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ.50,000 வழங்க உத்தரவு

சென்னை: ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ.50,000 இழப்பீடு தர நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற இருந்த நாளன்று பெய்த மழையின் காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 10ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதே நேரத்தில் ரசிகர்கள் ஆகஸ்ட் மாதம் வாங்கிய டிக்கெட்டை கொண்டு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியும் சேர்த்து ரூ.10,000 மதிப்புள்ள டிக்கெட் வாங்கிய சென்னை அண்ணாநகர் அர்ஜுன் என்பவர், நிகழ்ச்சிக்கு சென்றபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக தன்னால் நிகழ்ச்சியை கண்டுகளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10,00,000 இழப்பேடு வழங்க வேண்டும் எனவும் டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆணையம், இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC நிறுவனம் ரூ.50,000 இழப்பீடாகவும், அதே நேரம் ரூ.5,000 வழக்கு செலவாகவும் புகார் அளித்திருந்த அர்ஜுனுக்கு 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.