சென்னை: ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியர் திறனாய்வுத் தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நவம்பர் 29ம் தேதி நடக்கிறது. இந்த திறனாய்வுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெரும் மாணவ மாணவியரில் தெரிவு செய்யப்படும் மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் இ ருந்து 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1000 வதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
2025-2026 கல்வி ஆண்டில் சென்னை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதியில் கிராமப் பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் இந்த திறனாய்வுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 28ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.10 சேர்த்து, அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமோ, முதல்வர்களிடமோ ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
