சென்னை: தமிழகத்தில் 28ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. அதனால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 28ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று இயல்பை ஒட்டிய வெப்பநிலை இருக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.