திருமலை: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உலக மக்கள் தொகை தின விழா நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாம் தோற்றோம். இப்போது நாம் மக்கள்தொகை வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். 3 குழந்தைகளுக்கு மேல் இருக்கும்போதுதான் உண்மையான தேசபக்தி இருக்கும். எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தல்லிக்கு வந்தனம் திட்டத்தில் கல்வி உதவித்தொகை ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். மக்கள்தொகை வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். மக்கள் தொகை என்பது பிரச்னை இல்லை. அது நாட்டின் சொத்து. மக்கள்தொகை வளர்ச்சி பற்றி அனைவரும் பேச வேண்டும்.
தென்னிந்தியாவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற கவலை உள்ளது. அதற்கு காரணம் மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள்தான். ஒரு காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு என்று சொன்னோம். ஆனால் இப்போது மக்கள் தொகை மேலாண்மை என்று சொல்கிறோம். கூட்டுக் குடும்பங்கள் மீண்டும் வர வேண்டும். பெரிய குடும்பங்களை ஊக்குவிக்க திட்டங்கள் கொண்டு வரப்படும். மக்கள் தொகை நமக்கு ஒரு பெரிய சொத்து. தற்போது பல நாடுகளில், முதியவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இனிமேல், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்திற்காக மக்கள் தொகை மேலாண்மைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


