Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் தாக்குதலில் அணுசக்தி மையங்கள் கடும் சேதமடைந்துள்ளன: ஒப்புக் கொண்டது ஈரான்

துபாய்: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணுசக்தி மையங்கள் கடும் சேதமடைந்திருப்பதாக ஈரான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இப்போரில் அமெரிக்காவும் தனது பி-2 பாமர்ஸ் போர் விமானங்கள் மூலம் ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் ஆகிய 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவின் தாக்குதலில் அடுத்த பல ஆண்டுகள் செயல்பட முடியாத அளவுக்கு ஈரானின் அணுசக்தி மையங்கள் சேதமடைந்திருப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார். அதே போல அணுசக்தி மையங்கள் கடும் சேதத்தை சந்தித்திருக்கலாம் என ஐநாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு மையம் கூறியிருந்தது. ஆனால் ஈரான் இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. இந்நிலையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேலின் சட்டவிரோதமான தாக்குதலால் ஈரான் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.

எங்கள் நாட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் போர் குற்றம் புரிந்துள்ளது. இதற்காக அந்நாடு பொறுப்பேற்கப்பட வேண்டும். அமெரிக்காவை நாங்கள் ஒருபோதும் நம்பமாட்டோம். அமெரிக்காவின் தாக்குதலால் எங்களின் அணுசக்தி மையங்கள் கடும் சேதமடைந்திருப்பது உண்மைதான்’’ என்றார். அணுசக்தி மையங்கள் சேதமடைந்திருப்பதை ஈரான் முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த தாக்குதலின் விளைவாக ஐநாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிலிருந்து வெளியேற ஈரான் முடிவு செய்துள்ளது.