Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை

ஈரான்: அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் ஃபோர்டோ பகுதியில் சாதாரண ஏவுகணைகள் ஊடுருவ முடியாத வகையில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்த பங்கர் பஸ்டர் எனப்படும் அதிநவீன ஏவுகணையை வழங்கும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் கோரிக்கை விடுத்து வந்தது.

இந்த சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். குண்டுகளை வீசித் தாக்கும் அதிநவீன பி-2 போர் விமானங்கள் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளன. போர்டோ அணு உலை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், இதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும். முதற்கட்டமாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கிய அணுசக்தி நிலையங்களை இடமாற்றிய பிறகே அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அணுசக்தி நிலையங்களில் பெரிய தாக்குதல் இல்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.