புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட டீப்பேக் வீடியோ மற்றும் கன்டென்டுகளால் தனிநபர்கள், பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போலியான தகவல்கள் பரப்பபடுகின்றன. இதை தடுக்க ஐடி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த விதிகளை அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, டீப்பேக் அல்லது செயற்கையாக தயாரிக்கப்பட்ட உள்ளடக்கங்களை பயனர்கள் வேறுபடுத்தி பார்க்கும் வகையில் அவற்றில் லேபிள் மூலம் அடையாளப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல, மெட்டா போன்ற முக்கிய சமூக ஊடக தளங்கள் பதிவேற்றம் செய்யப்படும் கன்டென்டுகள் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பது குறித்து பயனரின் உறுதிமொழியை பெற வேண்டும் என்றும், அத்தகைய உறுதிமொழிகளை சரிபார்க்க தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் பயனர் விழிப்புணர்வை ஊக்குவித்தல், கண்டறியும் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருப்பதாக ஐடி அமைச்சகம் கூறி உள்ளது. இந்த வரைவு திருத்த விதிகள் குறித்து பொதுமக்கள் வரும் நவம்பர் 6ம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம்.


