Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை முடிவு எப்போது அறிவிக்கப்படும்? தேர்தல் ஆணையம் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி உள்கட்சி விவகாரம் குறித்து அதிகார வரம்பு உள்ளதா என்று ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது. ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அதுதொடர்பாக எந்த உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கவில்லை.

தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.