Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆக்ரோஷமான நாய் இறக்குமதி தடை விவகாரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் இறுதி முடிவு எடுக்க கூடாது: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆக்ரோஷமானமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து ஒன்றிய கால்நடைத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், வெளிநாட்டு நாய்களான பிட் புல், டோசா இனு உள்ளிட்ட நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை எதிர்த்து பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றங்கள், உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளன. கர்நாடகா உயர் நீதிமன்றம் இந்த கடிதத்தை ரத்தும் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, தடை விதிப்பதற்காக நாய்களை வகைப்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கால்நடைத் துறை கோரியுள்ளது.

ஜூன் 1ம் தேதிக்குள் மக்கள், தங்களை கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், அதுவரை தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், பொதுமக்களிடம் கருத்து கேட்பது சட்டப்படி தவறானது. நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை அமைத்து தான் கருத்து கேட்கும் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கூறி, இந்திய கென்னல் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கருத்து கேட்கும் நடைமுறை தொடரலாம். ஜூன் 14ம் தேதி வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என்று ஒன்றியஅரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.