மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த மத குருவின் வீடுகள் இடிப்பு: குஜராத்தில் புல்டோசர் நடவடிக்கை
பரூச்: குஜராத்தில் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மவுல்விக்குச் சொந்தமான சட்டவிரோத கட்டிடங்களை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளினர். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் கர்மலி கிராமத்தில் மதரசா நடத்தி வரும் மத குரு அஜ்வத் பெமட் (53) என்பவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். இவரிடம், சூரத் நகரைச் சேர்ந்த 28 வயதான நடிகை ஒருவர் தனது குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பரிகாரம் செய்வதாகக் கூறி அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து, அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது அஜ்வத் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கட்டாய மதமாற்றத்திற்கும் முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட அஜ்வத் பெமட் முறையான அரசு அனுமதியின்றி ரவித்ரா கிராமத்தில் வீடுகள் மற்றும் கடைகளையும், கர்மலி கிராமத்தில் உள்ள தனது மத்ரசாவிற்குள் ஒரு பெரிய கட்டிடத்தையும் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஏற்கனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நிர்வாக நடுவர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நேற்று அந்த கட்டிடங்கள் அனைத்தும் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. ‘குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

