Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இன்று ஆடி முதல் நாள் என்பதால் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் தொடர்ந்து 14 வாரம் வெகு விமரிசையாக விழா நடைபெறும். கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வாகனங்களிலும், பேருந்துகளிலும் சனிக்கிழமை பெரியபாளையம் வருவார்கள்.

பின்னர், கோயில் அருகில் வாடகைக்கு விடுதி எடுத்து இரவு தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் வளாகத்தில் ஆண்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் முடி காணிக்கை செலுத்தி பொங்கல் மண்டபத்தில் பொங்கலிட்டு ஆடு, கோழிகளை பலியிட்டு வேப்பமர அடியில் படையலிடுவார்கள். வேப்பஞ்ேசலை ஆடை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோயிலை சுற்றிவலம் வருவார்கள். அதன்பிறகு இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பவானி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்நிலையில் இன்று ஆடி மாத முதல் நாள் என்பதால், அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்டு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், ஜவ்வாது, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்தும் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து ஆற்றில் புனிதநீராடி மஞ்சள் மற்றும் சிகப்பு ஆடைகளை அணிந்து கையில் வேப்பிலை ஏந்தி பவானி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள புற்றுப்கோயிலில் பால் ஊற்றியும், சக்தி மண்டபம் எதிரில் நெய் தீபம் ஏற்றியும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை தரிசனம் செய்தனர்.