Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவு அதிகரிப்பால் ஆஸ்துமா உட்பட 8 மருந்துகளின் விலை 50% அதிரடி உயர்வு: தேசிய மருந்து விலை கட்டுப்பாடு மையம் தகவல்

டெல்லி: தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் அமைப்பானது, மருந்து நிறுவனங்களின் மருந்து விற்பனை விலை நிர்ணயம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கிறது. இந்நிலையில் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், ஆஸ்துமா, தலசீமியா, காசநோய், மனநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் எட்டு மருந்துகளின் உச்சவரம்பு விலையை 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. கடந்த 8ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், எட்டு மருந்துகளின் பதினொரு ஃபார்முலேஷன்களின் உச்சவரம்பு விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, அந்நிய செலாவணி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பென்சிலின், கார்டியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அட்ரோபின் ஊசி, காசநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரெப்டோமைசின் பவுடர், ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சல்பூட்டமால் மாத்திரைகள், கிளவுகோமா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பைலோகார்பைன் சொட்டு மருந்து,

பாக்டீரியா தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் செஃபாட்ராக்சில், ரத்த சோகை மற்றும் தலசீமியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டெஸ்ஃபெராக்சமைன், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் லித்தியம் மாத்திரைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் விலையை 50 சதவீதம் அளவிற்கு உயர்த்தி உள்ளதால், சமானிய நோயாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.