Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் சிங்கப்பூர், அந்தமான், மும்பை விமானங்களின் வருகை, புறப்பாடு என 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிங்கப்பூர் செல்லவேண்டிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 7.40 மணியளவில் அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.35 மணியளவில் மும்பை செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவற்றின் 3 புறப்பாடு சேவைகள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதேபோல், இன்று காலை மும்பையில் இருந்து காலை 7 மணியளவில் சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 12.30 மணியளவில் அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 2.50 மணியளவில் சிங்கப்பூரில் சென்னை வரவேண்டிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகியவற்றின் 3 வருகை சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னை விமானநிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் இன்று ஒரே நாளில் அந்தமான், மும்பை மற்றும் சிங்கப்பூர் விமானங்களின் வருகை, புறப்பாடு என மொத்தம் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்த விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த 6 விமானங்களிலும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் பயணிக்க வேண்டிய முன்பதிவு பயணிகளுக்கு ஏற்கெனவே குறுந்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் மாற்று விமானங்களில் பயணிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் நடக்கின்றன. மேலும் சில பயணிகளுக்கு மாற்று தேதிகளில் பயணிப்பதற்கு வசதியாக மாற்றி தரப்பட்டு உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.