கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி: விபத்து குறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் விரைவில் விசாரணை
கடலூர்:: கடலூர் முதுநகர் செம்மங்குப்பத்தில் ேநற்று காலை ரயில்வே கேட்டை கடக்கும்போது பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த நிமலேஷ் (12), காட்டுசாகையை சேர்ந்த திராவிட மணியின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15) ஆகியோர் இறந்தனர். மேலும் இறந்த நிமலேஷின் சகோதரர் விஸ்வேஷ் (16), வேன் டிரைவர் சங்கர் (47) மற்றும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற செம்மங்குப்பம் கூலி தொழிலாளி அண்ணாதுரை (55) ஆகியோர் படுகாயமடைந்து கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது செம்மங்குப்பம் ரயில் கேட்டுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கேட் கீப்பராக பணி நியமனம் செய்துள்ளனர். அவர் நேற்றிரவு முதல் பணியை தொடங்கி உள்ளார். இதற்கிடையில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, அளித்த வாக்குமூலத்தில், ‘விபத்து நடந்த அன்று நான் கேட்டை மூடியதால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி செல்பவர்களும் காத்திருந்தனர். எனவேதான் நான் கேட்டை திறந்துவிட்டேன்’ என்றார்.
ஆனால் விபத்தில் சிக்கிய வேன் டிரைவர் சங்கர், ‘நான் வேனை ஓட்டி சென்றபோது ரயில்வே கேட் திறந்திருந்தது. ரயில் சென்றுவிட்டது என நினைத்துதான் கேட்டை கடந்தேன். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த ரயில் வேன் மீது மோதியதால்தான் விபத்து நடந்தது’ என்றார். மேலும் விபத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவன் விஸ்வேசும், வேன் செல்லும்போது கேட் திறந்திருந்து என்று தான் கூறியுள்ளார். இதுபோன்ற மாறுபட்ட தகவலால் மூத்த உயரதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.
மாணவன் நிமலேஷ் உடல் இன்று ஒப்படைப்பு
விபத்தில் இறந்த மாணவி சாருமதி, அவரது தம்பி ெசழியன் ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இறுதி சடங்கிற்குபின் சொந்த கிராமமான சின்னக்காட்டு சாகையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலியான மற்றொரு மாணவன் நிமலேஷ் உடல் கடலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் விஸ்வேஷ் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். இதையடுத்து நிமலேஷின் உடலை வாங்கி இறுதி சடங்கு செய்ய உள்ளனர்.