Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2 இட்லி போதும் என்று கூறும்போது 3வது இட்லியை வாயில் திணிப்பது ஏன்? மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் காட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம், இங்கு மும்மொழி கொள்கை தேவையில்லாதது என திண்டுக்கல்லில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திண்டுக்கல்லில் தேசிய பூப்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணிக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. எம்எல்ஏக்கள் பழநி ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் காந்திராஜன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக பொதுச்செயலாளர் விஜய் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீரர்களுக்கு சீருடை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஆர்டிஇ (RTE) நிதிக்கு அதிக பங்கீட்டை மாநில அரசு தான் கொடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். 60:40 என விகிதாச்சாரம் இருக்கும்போது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும்? ஏழை பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் படிக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. யாரும் இதில் தலையிட முடியாது.

ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றம் சொல்வதையே கேட்க மாட்டேன் என்பதை போலத்தான் இதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்றிய, மாநில பள்ளிக்கல்வி துறை செயலாளர் இதுகுறித்து பேசி வருகின்றனர். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம். மும்மொழி கொள்கை என்பது தேவையில்லாதது. இருமொழி கொள்கையே போதுமானது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை வைத்து நமது திறமைகளை உலகம் முழுவதும் காண்பிக்க முடியும். 3வது மொழி கற்று கொண்டால் தவறில்லையே என ஒன்றிய அரசு கூறுகிறது. 3 மொழிகள் மட்டுமல்லாமல் 22 மொழிகளில் எதை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் என நாங்களும் கூறுகிறோம்.

ஆனால் அதில் கட்டாயம் இருக்கக் கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் கற்று கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டு 3வது மொழியில் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க கூறினால் எந்த விதத்தில் நியாயம்? தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது. உலகம் முழுவதும் ஒரு கருத்தை கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் போதுமானதாக உள்ளது என்று நாங்கள் கூறுகிறோம். ஒன்றிய அரசு அதை கேட்காமல் மீண்டும், மீண்டும் மூன்றாவது மொழியை ஏற்க கூறுகிறது.

இந்தி உள்ளே வருகிறது என்றால் அடுத்து சமஸ்கிருதம் உள்ளே வரும். சமஸ்கிருதம் வந்தால் பிற்போக்கு சிந்தனைகள் உள்ளே வந்துவிடும். 2 இட்லி போதும் என்று கூறும்போது, 3வது இட்லியை வாயில் திணித்தால் எங்களது பிள்ளைகள் வாந்தி தான் எடுக்கும். எந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும், கூகுள் மூலம் மொழி பெயர்ப்பு செய்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். கல்வி அறிவு என்ற பெயரில் மொழியை திணிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.