Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆத்தூர் மெயின் பஜாரில் நள்ளிரவில் துணிகரம் செல்போன் கடையில் கொள்ளையடித்த வழக்கில் சிறார் உள்பட 2பேர் கைது

*மேலும் இருவருக்கு வலை

ஆறுமுகநேரி : ஆத்தூர் மெயின் பஜாரில் கடந்த 1ம் தேதி நள்ளிரவில் செல்போன் கடையை உடைத்து ₹ 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் கொள்ளைபோன வழக்கில் சிறார் உள்ளிட்ட இருவரை கைதுசெய்த போலீசார், மேலும் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் முஸ்லிம் பெரிய தெருவைச் சேர்ந்த முத்து வாப்பாவின் மகன் சித்திக் (37). தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் மெயின் ரோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் இவர், கடந்த நவ. 30ம் தேதி இரவு 10 மணி அளவில் வியாபாரம் முடிந்தபிறகு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் (டிச.1ம் தேதி) காலை 6.30 மணியளவில் அப்பகுதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட சித்திக்கின் உறவினர்கள் சிலர் அவரது கடையின் பூட்டை உடைக்கப்பட்டுள்ளதோடு ஷட்டர் சிறிதளவு தூக்கிய நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சித்திக் அங்கு சென்றபோது மர்ம நபர்கள் கடையை உடைத்து அங்கிருந்த செல்போன் மற்றும் உதிரி பாகங்களை கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் மற்றும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் தடயவியல் நிபுணர் அருணாசலம் தலைமையிலான 3 நிபுணர்கள் கொண்ட குழுவினர் தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் இதுகுறித்து கடையின் உரிமையாளரான சித்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வுசெய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இதில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், உதிரி பாகங்கள் என ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அருண்குமார்(19) உட்பட 3 சிறார்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் கொள்ளை சம்பவத்து அன்று நள்ளிரவில் ஒரே பைக்கில் 4பேர் வந்ததாகவும், அதில் ஒரு நபர் அங்குள்ள தனியார் மருத்துவமனை முன்பு நின்று கண்காணித்ததாகவும், மற்ற 3 நபர்கள் செல்போன் கடைக்கு எதிர்புறம் பைக்கை நிறுத்திவிட்டு கடையின் பூட்டை உடைத்து, ஷட்டரை துக்க முடியாமல் சிறிதளவு தூக்கி கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அவ்வழியாக உள்ள சிசிடிவி காட்சிகளிலிருந்து முகத்தை மறைத்து தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.

செல்போன் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

ஆத்தூரில் செல்போன் கடையை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தாங்கள் திருடிச் சென்ற செல்போன்களில் புதிய சிம்கார்களை பொருத்தி ஆன் செய்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே திருடு போன செல்போன்களின் ஐ எம் இ நம்பர்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் திருடிய செல்போன்களின் ஐ எம் இ நம்பர்களின் மூலம் அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது. இதையடுத்து ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் போலீசார் தலைமறைவாக இருந்த சிறார் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.