குடியரசு தின தடகள போட்டிகள் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார் கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவில்
திருவண்ணாமலை, ஆக.7: கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், வட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. போட்டியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட உடற்கல்வி இயக்குநர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜய்ஆனந்த் வரவேற்றார். விழாவில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார்,
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகதீசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், ராமஜெயம், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 100 மீட்டர், 200 மீட்டர், 1,000 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. அதில், வெற்றி பெறும் வீரர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது.