திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலையில் 11 நாள் காட்சியளித்த மகாதீபம் நிறைவு: தீப கொப்பரை கோயிலை வந்தடைந்தது
திருவண்ணாமலை, டிச.15: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது கடந்த 11 நாட்களாக பக்தர்களுக்கு காட்சியளித்த மகாதீபம் நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, தீப கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. விழாவின் நிறைவாக, கடந்த 3ம் தேதி மகாதீப பெருவிழா நடந்தது. அப்போது, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவில், சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தீபத்திருவிழா நிறைவடைந்த பிறகும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், அண்ணாமலை மீது ஏற்றப்படும் மகாதீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது திருக்கோயில் மரபாகும். அதையொட்டி, கடந்த 3ம் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது மகாதீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது. மகாதீபம் ஏற்றுவதற்கு 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டது.
அதற்காக, அண்ணாமலையார் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை தினமும் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கடந்த 11 நாட்களாக தினமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்ததால், நேற்று காலை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள, செப்பினால் உருவான, சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்ட தீப கொப்பரையை தோளில் சுமந்தபடி மலையில் இருந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
நேற்று காலை 7 மணிக்கு மலை உச்சியில் இருந்து புறப்பட்ட தீப கொப்பரை, மதியம் ஒரு மணியளவில் கோயிலை அடைந்தது. மலையில் மண் சரிவு ஏற்படும் ஆபத்துள்ளதால், போலீசார் மற்றும் வனத்துறையினரின் பாதுகாப்புடன் தீப கொப்பரை கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்ட மகாதீப கொப்பரைக்கு, இரவு 7 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் தீப கொப்பரையை தரிசனம் செய்தனர்.
மேலும், ஜனவரி 3ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீபச்சுடர் பிரசாதம் (தீப மை) நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன் பிறகு, பக்தர்களுக்கு தீபச்சுடர் பிரசாதம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


