சாத்தான்குளம், அக். 18: சாத்தான்குளம் அருகே மனைவியை அவதூறாக பேசி, வீட்டு முன் இருந்த தட்டியை எரித்து கொலை மிரட்டல் விடுத்த கணவனுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளிவிளை சந்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெகதீஸ்வரன் (49). இவரது மனைவி சித்திரலேகா. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். சித்திரலேகா அதே பகுதியில் உள்ள ஆணையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 26.5.2023 அன்று ஜெகதீஸ்வரன், அவரது மனைவி சித்திரலேகா இருந்து வரும் ஆனையூருக்கு சென்று அவரை அவதூறாக பேசி, வீட்டு முன் இருந்த தட்டியை தீவைத்துக்கொளுத்தி உள்ளார். மேலும் மனைவியை வீட்டை விட்டு செல்லவில்லை என்றால் இதேபோல் தீ வைத்து கொளுத்தி விடுவதாக மிரட்டி உள்ளார். இதில் அவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
இது குறித்து சித்திரலேகா மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்போதைய உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கு சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவி ரக்ஷா, மனைவியை அவதூறாக பேசியதற்கு ரூ.500 அபராதமும், ஒரு வாரம் மெய்க்காவல் தண்டனையும், தட்டியை எரித்து கொலை மிரட்டல் விடுத்ததற்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை ரூ.5000 அபராதமும் விதித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும், ஏற்கனவே சிறையில் இருந்த 38 நாட்களை கழித்து சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
