Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் பறவைகள் சரணாலயத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*செல்ல பிராணிகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தனர்

ஏலகிரி : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சி பெற்ற சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இம்மலை ஏழைகளின் ஊட்டி எனவும், மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலைக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் , தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து பொழுது போக்கி செல்கின்றனர். ஏழைகளின் ஊட்டி ஏலகிரி மலை பெங்களூர்,சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை அருகில் உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இம்மலைக்கு பயணம் செய்யும்போது மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது.

இங்கு முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சகச விளையாட்டுத் தலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், கதவநாச்சியம்மன் திருக்கோவில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் இம்மலையில் உள்ளன.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அரசு சுற்றுலா தலங்களான படகு இல்லத்திலும், இயற்கை பூங்காவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குடும்பத்தோடும், நண்பர்களோடும், குழந்தைகளோடும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் இயற்கை பூங்காவில் மலர்கள், பூக்கள், ரசித்தும் புல் தரையின் மேல் அமர்ந்து பொழுது போக்கினர். இதனைத் தொடர்ந்து நேற்று பறவைகள் சரணாலயங்களிலும், சாகச விளையாட்டு தளங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்குள்ள செல்லப் பிராணிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் உணவு கொடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.