Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உன் பக்கத்தில் இருப்பது யார்?

அலுவலக நேரம் முடிந்த பிறகு கொஞ்சம் வேலை செய்யலாம் என்று நினைத்தால், ஒரு குரல் கேட்கும். நானும் இப்படித்தான், இந்த அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் வேலை வேலை என்று கால நேரம் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருப்பேன். ஆனால், இந்த நிறுவனம் எனக்கு எதுவும் செய்யவில்லை. சம்பள உயர்வுகூட சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது. பேசாம வீட்டுக்கு போய் குழந்தைகளுடன் பொழுதை கழியுங்கள் என்று கேட்காமலேயே ஒரு அறிவுரை கிடைக்கும். விசாரித்தால்தான் தெரியும் அவரது வேலையே ஒழுங்காக வேலை செய்பவர்களை கெடுப்பது என்று. அது போன்றவர்களை சற்றும் யோசிக்காமல் தள்ளி வையுங்கள்.

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், முதலில் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் யார் என சிந்தியுங்கள். அவர் சுறுசுறுப்பானவரா?, இறை நம்பிக்கை கொண்டவரா?, விரக்தி எண்ணம் இல்லாதவரா?, செய்யும் தொழிலை நேசிப்பவரா? தக்க நேரத்தில் எடுத்து சொல்லி நம்பிக்கையூட்ட நல்ல மனிதர்கள் இல்லாததால் வாழ்க்கையில் தோற்றவர்கள் பலர். பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள்கூட தங்கள் பக்கத்தில் இருந்த தவறான எண்ணம் கொண்டவர்களால் சரிந்து போயிருக்கின்றன.

எனவே வாழ்க்கையில் வெற்றி பெற உங்களை எந்த லட்சியமும் இல்லாமல் சதா வாழ்க்கையை குறை சொல்லிக்கொண்டு பொழுதை போக்குபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளாதீர்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும், துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருப்பவர்களை தேடி தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதை போல, உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் உங்களால் உற்சாகம் பெற வேண்டும் என்று நினையுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களை நீங்கள் உற்சாகப்படுத்துங்கள், அப்போதுதான் உங்கள் அருகில் இருக்க விரும்புவார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற ஒன்றை முடிவுசெய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும், அல்லது நீங்கள் உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

இறைமக்களே, ``ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின’’

(2 கொரிந்தியர் 5:17) என்று இறைவேதம் கற்பிக்கிறது. இயேசுகிறிஸ்துவை நாம் நெருங்க நெருங்க பழைய சுபாவங்கள் ஒழிந்து, அவரது நல்ல மற்றும் உயர்ந்த சுபாவங்கள் நம்மை அறியாமலேயே ஒட்டிக் கொள்கிறது. எனவேதான் இயேசுவின் பக்கத்தில் அதாவது அவரது வார்த்தைகளோடு ஒன்றியிருப்பது அவசியமாயிருக்கிறது.