வடமொழியில் வெற்றிலையை நாகவல்லி, தாம்பூலா என அழைப்பர். வெற்றிலையை குஜராத்தியிலும், இந்தியிலும், வங்காளத்திலும், மராத்தியிலும் ‘பான்’ என அழைப்பர்.
தமிழில் வெற்றிலை எனச் சொல்லப்படுவதை தெலுங்கில் ‘தொம்மல ஆக்கு’ எனவும், மலையாளத்தில் ‘வெற்றிலா’ எனவும், கன்னடத்தில் ‘விடையலா’ எனவும் அழைப்பர். வெற்றிலைத் தாம்பூலம் குறித்து புராணக் கதைகளும் உண்டு. மகாபாரதத்தில், சபாபர்வதத்தில் ராஜசூயயாக சருக்கத்தில் தாம்பூல மரியாதை கண்ணனுக்கு வழங்கக் கூடாது என சிசுபாலன் எதிர்க்க, சிசுபாலனுடைய வதம் நடைபெறுகிறது. அதற்குப் பின், யாருக்கு முதல் தாம்பூலம் கொடுப்பது என்ற நிலை ஏற்பட்ட பொழுது, கண்ணனுக்கே முதல் தாம்பூலம் வழங்கப்படுகிறது.
ராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதையை, அனுமன் சந்தித்து ஆறுதல் கூறும் பொழுது, அனுமனின் ஆறுதல் மொழியில் மகிழ்ந்த சீதை, பக்கத்திலிருந்த வெற்றிலைக் கொடியை அனுமனுக்கு அணிவித்தாள் என்று ராமாயணம் கூறும். ஆகவேதான் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கிறார்கள். வெற்றிலையில் மகாலட்சுமி ஆவாகனம் இருப்பதாகச் சொல்வர். கருநீலம் கொண்ட வெற்றிலை அம்பாளுக்குரியது. இறைவழிபாட்டில் வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்யும் போது, சுண்ணாம்பு வைப்பதில்லை.
ஆனால், அம்பிகைக்கு நிவேதனப் பொருளாக வைக்கும் பொழுது சுண்ணாம்பு வைத்து பீடா தயாரித்து வைக்கும் பழக்கம் வடநாட்டில் உண்டு. வெற்றிலை பச்சை நிறத்தில் காட்சி தருகிறது. இது புதன் கிரகத்திற்கு உரியதாகும். புதன் நல்ல அறிவாற்றலையும், திறனையும் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
வெற்றிலை மரகதப் பச்சையாகக் காட்சி தருவதால், அம்பாள் அம்சமாக உள்ளது. அம்பாளை வேண்டிட அனைத்துச் செல்வமும் கிடைக்கும். பச்சை நிற வெற்றிலை, புதன் கிரகத்திற்கு உரியது போல, அரக்கு நிறத்தில் உள்ள பாக்கு செவ்வாய்க்கு உரியது. செவ்வாய் வீரத்தையும் கடன் வாங்காமலும் வாழ வைப்பார். சிவனின் நிறம் வெண்மை, வெற்றிலைப் பாக்குடன் சுண்ணாம்பு சேர்த்து சிவப்பாகும் பொழுது அம்பாளின் சக்தி அதிகமாகிறது. வெற்றிலை அனுமனுக்கு உகந்தது. அதன் பெயரிலேயே வெற்றி இருப்பதால் வெற்றிலை, அனுமானுக்கு சாற்றுவதில் முறைமை உண்டு. வியாழன், சனி அல்லது அமாவாசை காலை எழுந்து நீராடியபின், இரண்டு வெற்றிலை மத்தியில் ஒரு பாக்கு வைத்து சுருட்டி 108 வெற்றிலையை 54 ஆக வைத்து மாலையாகத் தொகுத்து சாற்ற வேண்டும்.
வெற்றிலை ஆவுடையாராகவும் பாக்கு சிவலிங்கமாகவும் கருதப்படுகிறது. அசோகவனத்தில், சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், ராமபிரான் கூறிய செய்தியை சொல்கிறார்.
சோகத்தில் மூழ்கியிருந்த சீதாபிராட்டியை ஆஞ்சநேயர் ராமபிரான் நாமத்தை பாடியும் ஆடியும் மகிழ்வித்தார். இக்காரணத்தால், சீதாதேவி மனம் மகிழ்ந்து, ராமநாமத்தை ஜெபித்து அருகில் கிடந்த வெற்றிலையை எடுத்து ஆஞ்சநேயர் மேல் போட, அனுமனும் மகிழ்ந்தார்.
இதன் காரணமாக ஆஞ்சநேயருக்கு ராமநாமத்தை ஜெபித்து சீதாதேவியை நினைவில் கொண்டு பக்தியுடன் வெற்றிலை மாலையை யார் அணிவித்தாலும் அவருக்கு அளவு கடந்த அருளும் நன்மையும் அளிக்கிறார்.
வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. வெற்றிலையை வாட விடக்கூடாது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் வெற்றிலை இருந்தால் அது ஆண் வெற்றிலை என்றும், இளம் பச்சை நிறத்தில் இருந்தால் அது பெண் வெற்றிலை என்றும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. வெற்றிலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஸ்வரூபமாகவும் கருதப்படுகிறது. நுனியில் லட்சுமியும், நடுவில் வாணியும், காம்பில் துர்க்கையும் உள்ளனர். வெற்றிலை நோயில்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. பாக்கு செல்வம் கிடைக்க வழி வகுக்கிறது. வாழைப்பழம் பாவ புண்ணிய விடுதலையை குறிக்கிறது. தேங்காய் அறிவை தருகிறது. அதனால்தான் வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் வைத்து இறைவனுக்கு நிவேதிக்கிறோம்.