கிரகங்களே தெய்வங்களாக
ஒரு மனிதனின் வாழ்வில் மூன்று விஷயங்கள் அவன் வாழ்நாள் முழுதும் பயணிக்க கூடிய வகையில் உள்ளன.முதலாவது தாய் - தந்தை, இரண்டாவது குலதெய்வம், மூன்றாவது அவனது இஷ்ட தெய்வம் என்ற பாக்ய ஸ்தானத்தில் உள்ள தெய்வம் ஆகிய மூன்றும் வாழ்வில் தொடரும். இதில் ஏதேனும் ஒன்று நம்மை வாழ்வில் வளப்படுத்திக் கொண்டேஇருக்கும்.அந்தவகையில் கிரகங்களாகவும் பாக்யஸ்தானத்தில் உள்ள தெய்வங்களாகவும் உள்ளவை நம்மை தொடரும்.படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது என்ற கர்வத்தில் விஷ்ணுவிடம் சக்தியில்லை என்ற எண்ணம் பிரம்மனுக்கு உண்டானது. இதையறிந்த விஷ்ணு ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார். பூதத்தை கண்டு பயந்த பிரம்மா, தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை பயமுறுத்துகிறது விஷ்ணுவிடம் கூறினார்.
அதற்கு பெருமாள், ``உனது கர்வத்தை அடக்கவே இந்த பூதத்தை அனுப்பினேன். உனது அகங்காரத்தினால் படைப்புத் தொழில் மறந்து போகும்’’ என சாபமிட்டார். வருந்திய பிரம்மா விஷ்ணுவிடம் சாபவிமோசனம் வேண்டினார். அதற்கு விஷ்ணு, ``பூமியில் சென்று தவம் செய்தால் சாப விமோசனம் உண்டாகும்’’ என கூறினார்.பிரம்மன் பிரளய காலத்தில் அழியாத ஸ்தலமான கும்பகோணம் வந்து தவம் செய்தார். அங்கு நடைபெற்ற யாகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சேவை செய்தனர். அச்சமயம், யாக குண்டத்தில் மகாலட்சுமி சமேதராக விஷ்ணு தோன்றினார். சாபவிமோசனம் கொடுத்து வேதங்களை மீட்கச்சொல்லித்தந்து ``வேத நாரயணன்’’ என்ற நாமகரணத்தை பெற்றார். தாயார் ``வேதவல்லி” என நாமகரணத்தையும் பெற்றார். யாகம் முடிந்ததும் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஸ்நானம் செய்வதற்கு தன் கதாயுதத்தால் பூமியை பிளந்து ``ஹரி சொல்லாறு’’ என்ற நதியை உருவாக்கினார். இதுதான் இன்று அரசாலாறு என அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் உள்ள திருத்தலம்தான் பிரம்மன் திருக்கோயில், பிரம்மா தனது தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப் பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் வேத நாராயணப் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியருடனும், பிரம்மனுக்கு எதிரில் யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். இங்கு மூன்று சந்நதிகளுடன் உள்ள பிரம்மா, விஷ்ணுவை வணங்குவது சிறப்பம்சம் ஆகும். இங்குள்ள தெய்வத்திற்கு ராகு - கேது நீங்கலாக ஏழு கிரகங்களும் நாமகம் செய்துள்ளன என்பது சிறப்பம்சமாகும்.
*மாசி மாதம் வரும் பௌர்ணமி அன்று கோளறு பதிகத்தை இந்த திருத்தலத்தில் பாராயணம் செய்தால் எப்படிப்பட்ட நவகிரக தோஷமும் விலகும்.
*பூரம் நட்சத்திர நாளில் வரும் வெள்ளிக்
கிழமை அன்று இங்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஐஸ்வர்யம் கைகூடும், குபேர சம்பத்து உண்டாகும். மறுநாள் சனிக்கிழமை கறுப்பு நிறப்பசுவிற்கு உணவு கொடுத்து வர வேண்டும்.
*அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத் தன்றோ அல்லது சனிக்கிழமை அன்றோ எள்ளுருண்டையும் நெய்யும் சுவாமிக்கு கொடுத்து வெள்ளைநிற பசுவிற்கு உணவு கொடுத்தால் கடன் பிரச்னைகள் தீரும்.
*சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் இக்கோயில் தரிசனம் அபிஷேகம் செய்து தீர்த்தத்தை பருகினால் படிப்பில் முதலிடம் பெறுவார்கள். விசாகம், புனர்பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் பி.எச்டி., மற்றும் முதுநிலைப்படிப்புகளில் வெற்றி பெறுவார்கள்.
*கிருத்திகை முதல் உத்திரம் வரை சுவாமிக்கு எள், கோதுமை மேல் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிலப்பிரச்னை, சொத்து பிரச்னை, நீதிமன்றம் வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
*லக்னத்திலோ, 10ஆம் இடத்திலோ சனி அமர்ந்தால் மூன்று நதிகளில் நீர் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் நிறைய மாற்றங்கள் உண்டாகும். மேன்மேலும் வளர்ச்சி அடைவார்கள்.