Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில்

சூட்சும ரூபத்தில் உள்ள இறையாற்றலை உணர்வதற்கும் நாம் நல் வழி பெறுவதற்கும் உள்ள தலமே கோயிலாகும். இந்த கோயில்களில் யாரெல்லாம் எந்த தருணத்தில் போனால் நமக்கான நற்பலன்களை அடையலாம் என்பதை ஜோதிடம் நமக்கு அறிவுறுத்துகிறது. அதன்வழி நாம் பின்பற்றினால் நமக்கான குறைகளை சரி செய்து கொள்ளவும். பிரச்னைகளை தீர்ப்பதற்கு உண்டான வழிமுறைகளையும் அறியலாம். இதுவே கிரகங்களே தெய்வங்களாக என்ற தலைப்பில் விரிவடைகிறது.

வசந்தராஜன் என்ற மன்னன் நரசிம்மரின் மீது அதீத பக்தியுடன் இருந்தான். தனது ராஜ்ஜியம் பெரிதாகவும் மக்கள் நலமுடன் இருக்கவும் நரசிம்மருக்கு யாகம் செய்ய ஏற்பாடு செய்தான். இதனை தடுப்பதற்கு பரிகாலாசூரன் என்ற அரசன் படையுடன் புறப்பட்டான். அசுரன் வருவதை அறிந்து கொண்ட அரசன் கையில் கங்கணம் கட்டி, ``அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர'' எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்தவாறு புதரில் மறைந்து இருந்தார். அப்படியும் அசுரன் பரிகாலாசூரன் வசந்தராஜனை கோடாரியால் தாக்கினான். இதனால் கோபமடைந்த நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிரமாக மாறி பரிகாலாசூரனை அழித்து காட்சி கொடுத்தார்.

இதனால் இத்தலம் பரிக்கல் என்றழைக்கப்படுகிறது. பின்பு, நரசிம்மர் மன்னனுக்கு தரிசனம் கொடுத்தார். மன்னன் நரசிம்மரிடம் ‘‘பரந்தாமா தங்களை நாடி வரும் பக்கதர்களுக்கு குறை தீர சாந்த நரசிம்மராக அருள வேண்டும்'' என வேண்டுக்கோள் வைத்தான்.

மன்னன் கோயில் கட்டினான். இதற்கு தேவசிற்பியான விஸ்வகர்மா லட்சுமி நரசிம்மர் சிலை கொடுத்தார். இங்கே லட்சுமியுடன் சாந்த நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள லெட்சுமி நரசிம்மருக்கு சூரியன், செவ்வாய், சனி, சுக்ரன் ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளன.

*அனுஷம் நட்சத்திரம் அல்லது உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று எட்டு நீர் குளத்தில் புனிதநீரை எடுத்துவந்து அதனை சுவாமிக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை வாங்கி வந்து வீட்டில் தெளித்தாலோ அல்லது ஒரு சிறு மண்சட்டியில் போட்டு உத்திரத்தில் வைத்தால் உங்களின் ஏழ்மை நிலையில் இருந்து வளர்ச்சியை நோக்கி முன்னேற்றம் அடைவீர்கள்.

*பூரம், விசாகம் நட்சத்திர நாளில் மூன்று நீர் நிலைகளில் நீர் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நீல நிற சங்கு பூவை இருபத்தி நான்கு (24) என்ற எண்ணிக்கையில் மாலை தொடுத்து சுவாமிக்கு கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை மூன்று முறை செய்தால் எப்பேர்பட்ட திருமணத் தடையும் விலகி விரைவில் சுபகாரியம் நடைபெறும்.

*பரணி, பூராடம் நட்சத்திர நாளில் மரத்திலிருந்து அத்திப்பழததை எடுத்து பிரசாதம் செய்து சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து, கன்னிப் பெண்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தானம் கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் குபேர சம்பத்து உண்டாகும்.

*கிருத்திகை நட்சத்திரத்தின் நீல நிற சங்கு பூவை கோயில் வெளியில் எங்காவது புதைத்து சுவாமிக்கு மூன்று தனித்தனி மரத்தில் அத்திப்பழம் எடுத்து அத்திப்பழம் நெய்வேத்தியம் கொடுத்து அந்த பிரசாதத்தை அங்கு கொடுத்தால் திருமணப் தடை விலகும், சொத்து பிரச்னை தீரும், நீதிமன்றத்தில வழக்குகள் இருந்தால் விரைவில் முடிவுக்கு வரும்.

*வெள்ளிக்கிழமை வரும் ஏகாதசி திதி அன்று மறுமாங்கல்யம் செலுத்தினால் கணவன் - மனைவி பிரச்னைகளில் தீர்வுகள் உண்டாகி ஒற்றுமையாக இருப்பார்கள்.

*மேஷம் லக்னக்காரர்கள் அவிட்டம் நட்சத்திர நாளில் கோயிலுக்கு ஆடு கொடுத்தால் எந்த பிரச்னை இருந்தாலும் குறைந்து நலமான வளமான வாழ்க்கை வாழ பரிக்கல் நரசிம்மர் நமக்கு அருள்புரிவார்.