அன்ன சரஸ்வதி தந்த அமுதசுரபி
பராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமியை அன்ன லட்சுமி என்று அழைக்கிறோம். சரஸ்வதியை அவ்வாறு அழைக்கும் வழக்கமில்லை. அன்ன சரஸ்வதி என்றால் அன்ன வாகனத்தில் பவனிவரும் சரஸ்வதி என்றே பொருள் கொள்வர். சரஸ்வதி அள்ள அள்ளக் குறையாத உணவு தரும் அமுத சுரபி என்னும் பாத்திரத்தை ஆபுத்திரன் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அதைக்கொண்டு அவன் உலகமக்களின் பசிப் பிணியைத் தீர்த்ததாகவும் தமிழ்க் காப்பியமான மணிமேகலை கூறுகிறது. சரஸ்வதி ஆலயத்தைக் கலைநியமம் என்பர். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திலுள்ள சரஸ்வதி சந்நதி கலைநியமம் என்று அழைக்கப்படுகிறது. இதில் சிந்தாதேவி எனும் பெயரில் வீற்றிருக்கும் சரஸ்வதியே ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை அளித்து அருள்பாலித்தவள் ஆவாள்.
அயல் நாட்டில் சரஸ்வதி
ஐப்பானியர்கள் ‘பென்டென்’ என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார். இந்தோனே ஷியாவிலும், பாலித் தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர். விஜயதசமி நாளில் பாலித் தீவில் ‘கம்பாத் ஸ்ரிம்’ என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
வலம்புரிச் சங்கும் மகாலட்சுமியும்
மகாலட்சுமி உறையும் இடங்களில் வலம்புரிச் சங்கும் ஒன்றாகும். தூய வெண்ணிறமான வலம்புரிச் சங்கை வெண்கடுகு அல்லது நெல்லால் நிரப்பி அதில் தாமரை வடிவில் செய்த பொற்காசை இட்டு மகாலட்சுமியாகப் பூசித்து வர சகல சௌபாக்கியங்களும் கிட்டும். தாமரை பத்மநிதியையும், சங்கு சங்க நிதியையும் குறிக்கின்றன. சங்கை ஆமை வடிவில் செய்யப்பட்டு ஆசனத்தின் மீது வைத்து வழிபட நிலையான செல்வம் பெருகும். சங்கம் என்பதற்குச் சங்கு என்ற பொருளுடன் கூட்டம் என்பதும் பொருளாகும். பலவிதமான செல்வங்களைத் தரும் தேவியாக சங்கலட்சுமி விளங்குகிறாள்.
புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்கு
திருமணமான பார்வதி தன் புகுந்த வீடான கைலாயத்திலிருந்து பிறந்த வீடான வங்காளத்திற்கு விஜயதசமி அன்று வருவதாக கொல்கொத்தா மக்களிடையே நம்பிக்கை உண்டு. எனவே துர்க்கை பூஜை வங்காளத்துப் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பூஜையை ஒட்டிப் பெண்கள் தங்கள் தாய்வீடு செல்வர். புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீடு வரும் மகளை பெற்றோர் வரவேற்றுக் குங்குமம், வளையல், புடவை, இனிப்புகள் தந்து மகிழ்கின்றனர்.
வித்தியாசமாய் துர்க்கை
புதுக்கோட்டை மலையபட்டியில் குடைவரை சிவன் கோயில் உள்ளது. அங்கு தாமரை மலரில் நின்ற கோலத்தில் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள் துர்க்கை. அதேபோல, ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் பிடாரியின் மீது நின்று அருள்பாலிக்கும் துர்க்கையை தரிசிக்கலாம்.
வழிபாட்டின் பலன்
வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள், யாகத்தின் இறுதியில் கூறப்படும் ‘சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.
75 நாட்கள் கொண்டாட்டம்
சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜகதல்பூரில் தண்டேஸ்வரி மாயி கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து தசரா பண்டிகையை 75 நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்த பகுதியிலுள்ள பழங்குடியினர் தத்தமது பிரிவினர் வணங்கும் தெய்வசிலைகளைக் கொண்டு வருவர். பின்னர் அதை தண்டேஸிவர் அம்மன் முன் வைத்து தசரா விழாவைத் துவங்குகின்றனர். இந்த விழா தொடர்ந்து 75 நாட்கள் நடைபெறும். இவ்வளவு நீண்ட தசரா கொண்டாட்டம் வேறு எங்குமே நடைபெறுவதில்லை.
ராவணனுக்கு பூஜை
விஜயதசமியன்று வடமாநிலங்களில் ராமலீலா எனும் பெயரில் ராவணனின் பொம்மைகளைத் தீயிட்டு எரிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால், மத்தியப்பிரதேசத்தில் ‘கோன்புரா’ எனும் கிராமத்தில், விஜயதசமி அன்று அவ்வூரின் மத்தியில் அமைந்துள்ள மிகப் பெரிய ராவணன் சிலைக்கு விசேஷ பூஜைகள் நடத்தி மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
விஜயதசமி வித்தியாச வீதியுலா
கோவை ராஜவீதியில் 300 ஆண்டுகள் பழைமையான சவுடாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இங்கு விஜயதசமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காலை ஊருக்கு வெளியே உள்ள காவல் தெய்வம் கோயிலிலிருந்து பூரணகும்ப தீர்த்தத்தில் அம்மன் ஆவாகனம் செய்து அழைத்து வருவர். அச்சமயத்தில் இளைஞர்களும், சிறுவர்களும் அம்மன் பெயரை உச்சரித்துக் கொண்டே கலசத்தின் முன் கத்திகளால் நெஞ்சிலும், வயிற்றிலும், புஜங்களிலும் அலகு போட்டபடி ஊர்வலமாகச் செல்வர்.
கல்வியும் கற்றலும்
கல்லுதல் என்றால் தேவையற்ற புல் பூண்டுளை வேரோடு பறித்து எடுத்தல் என்று பொருள். மனத்தில் உண்டாகும் குற்றங்களை வேறோடு பிடுங்கி எறிவதற்கு பயன்படுவதே கல்வி. கல்வி என்பதும் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் மட்டுமே எண்ணக் கூடாது. சமுதாயத்தை நன்கு மதித்து மக்கட் பண்புகளோடு நடந்து கொள்வதே கல்வி கற்றலின் பயனாகும் அவை உலகியில் வாழ்விற்கு உபயோகம் ஆகுமேயன்றி நல்ல மனநிறைவான வாழ்விற்குத் துணையாகாது. கல்வியில் மனித மனம் மேம்படுகிறது. நல்ல உயர்ந்த உள்ளம் கிட்டுகிறது. தெய்வத்தின் பால் மனம் செலுத்தப்படுகிறது. வள்ளுவர் கற்றதானால் ஆய பயன் என் வால் அறிவன் நற்றாள் தொழார் எனின் என்கிறார். உயர்ந்த சமயக் கல்வி மோட்சத்திற்கு வழியாகிறது.
துர்க்கை அம்மன்
துர்க்கை அம்மன் எல்லா கோயில்களிலும் வடக்கு நோக்கி காட்சி தருவாள். திருவாரூர் சோமேஸ்வரர் ஆலயத்தில் மட்டும் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். காவிரிக்கரையில் அமைந்துள்ள அழகிய மோகனூர் தலத்தின் ஆலயக் கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் தேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின் போது ‘திருப்பதியில் ஒரு நாள்’ என்னும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் அனைத்து பூஜைகளும் இங்கு நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும், ருக்மணியும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கலாம். இந்த அமைப்பை சம்மோஹன கிருஷ்ணன் என்பார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளுவார்.