நம்மாழ்வாரின் திருவாய்மொழி படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பாசுரம் இது. வாழ்வாங்கு வாழ்த்து, நற்பதம் என்று சொல்லப்படும், வைகுண்டம் செல்லும் உயிரை, அங்கே உள்ள அமரர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் அருமையான பாசுரம் இது.
விதிவகை புகுந்தனர் என்று நல்வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்
மதி முக மடந்தயர் ஏந்தினர் வந்தே.
இந்தப் பாசுரத்தின் அர்த்தத்திற்குள் நான் இப்பொழுது செல்லப் போவதில்லை. ஆனால் அதிலே உள்ள “விதி” என்ற வார்த்தை பல்வேறு சிந்தனைகளைத் தந்தது.
இந்தப் பாசுரத்திற்கு முன் உள்ள பாசுரத்தில் ‘‘வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’’ என்று பாடுகிறார். அங்கேயும் விதி என்ற வார்த்தை வருகிறது.
ஒருவனுடைய வாழ்வின் நோக்கம், மண்ணுலகில் வாழ்வாங்கு பெரியவர்கள் வகுத்த விதிகளின் படி வாழ்ந்து, வைகுண்டம் ஆகிய பெரும் பதம் அடைய வேண்டும், அதுதான் அவன் பெறுகின்ற பெரும்பேறு, என்பதுதான் இந்தச் சொல்லுக்கு பொருள்.
அதாவது விதி என்பது அடைய வேண்டிய பேறு என்ற பொருளில் இங்கே வருகிறது. மனிதப் பிறவியின் நோக்கம் என்பதாக இங்கே பொருள் படுகிறது.
மேலே சொன்ன பாசுரத்தில், இப்படிப்பட்ட ஒருவன், நம்முடைய உலகத்தில் வந்து சேர்ந்தது, அந்த வைகுந்தத்தில் உள்ளவர்கள், தங்களுடைய பாக்கியமாக, அதாவது, தங்களுடைய விதியாகக் கருதிக் கொண்டார்கள் என்ற பொருளில் வருகிறது.
இங்கே விதி என்பது, ஒரு நோக்கத்தைக் கொண்டு வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது.
ஒரு கொள்கையைக் கொண்டு அதனால் அடைய வேண்டிய இலக்கை பெறும் வாழ்க்கை முறையைக் குறிக்கிறது.
விதி என்ற சொல்லுக்கு இது மட்டும் தான் பொருளா என்றால், பல அர்த்தங்கள் உண்டு.
விதி என்பது வகுக்கப்பட்ட (framed) அல்லது நிர்ணயிக்கப்பட்ட (determined) ஒன்றைச் சொல்வது.
நம்முடைய வாழ்க்கை, நம்முடைய கடந்தகால வினைகளால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று பிறக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டு விட்டதை விதி (fate) என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். இந்த விதி என்பது எல்லோருக்கும் உண்டு. பிரபஞ்சத்திற்கும் உண்டு.
பிரபஞ்சமானது ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட சில ஒழுங்கு முறை அமைப்பில் இயங்குகிறது. பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைப் பொருள்களும் ஒன்றை ஒன்று இடித்துக் கொள்ளாமல், தனக்குரிய பாதைகளில், தனக்குரிய வேகத்தில், தனக்குரிய புவியீர்ப்பு விசையோடு இயங்கிக்கொண்டிருக்கும் அற்புதத்தைப் பார்க்கின்றோம்.
இந்த இயக்கத்தை பிரபஞ்ச விதி (law of Universe) என்று சொல்கின்றோம். ஆக, இதுவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது தான். யார் நிர்ணயித்தார்கள்? யார் இயக்குகிறார்கள்? என்பதை நோக்கிய சிந்தனை தான் மெய்ஞானப் பயணமாக விரிகிறது.
நடைமுறை வாழ்வியலுக்கு வருவோம்.
சமூகம், நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்(rule) கீழ் தான் வாழ்கிறது. இந்த விதிகளை சட்டங்கள் சொல்லுகின்றோம். உதாரணமாக போக்கு வரத்து விதிகளை எடுத்துக் கொள்வோம்.
இப்படித்தான் வண்டி ஓட்ட வேண்டும், இங்குதான் கடக்க வேண்டும், இவ்வளவு வேகத்தில் தான் ஓட்ட வேண்டும், என்று பல்வேறு விதிகள் இருக்கின்றன. இந்த விதிகளை ஒட்டித் தான் நாம் வாழ வேண்டி இருக்கிறது.
ஆனால் ஒரு நுட்பமான வேறுபாடு.
இந்த விதிகளை எல்லாம் மனிதன் தீர்மானித்துக் கொள்கின்றான்.
இயற்கையின் விதிகளோடு, மற்ற உயிரினங்கள் எல்லாம் இணைந்து அனுசரித்து வாழுகின்றன.
ஆனால் மனிதன் பல நேரங்களில் தானே வகுத்துக்கொண்ட விதிகளினால் காடுகளை அழிப்பது, காற்றை மாசுபடுத்துவது, தண்ணீரை மாசுபடுத்துவது, என்று பல்வேறு விதமாக, இயற்கையின் விதிகளுக்கு முரணாக பிரபஞ்ச விதிகளை மீறுகின்ற பொழுது, இயற்கையால் தண்டிக்கப்படுகிறான்.
பிரபஞ்சத்தைப் பொருத்தவரை விதிமீறல்களுக்கு எந்தத் தாட்சண்யமின்றி தண்டித்து விடுகிறது. தனக்குரிய விதிகளையும், தான் வாழும் உலகின் இயக்க விதிகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதன் குழப்பமின்றி மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு இந்த விதி புரிதல் அவசியம்.
இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன்.
எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு விளையாட்டுக்கும் பல விதிகள் (rules of games) இருக்கின்றன. அந்த விதிகளை ஒட்டித்தான் விளையாட வேண்டும். அந்த விதிகளை மீறி விட்டால், அவன் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி செல்லாததாகி விடுகிறது.
பல போட்டிகளில், வெற்றி பெற்றவர்கள், அந்த வெற்றிக்காக, சில மருந்துகளை எடுத்துக் கொண்டார்கள், விதியை மீறி விட்டார்கள், என்று சொல்லி, அவர்கள் பெற்ற வெற்றியை ரத்து செய்திருப்பதையும் நாம் படித்திருக்கிறோம் அல்லவா!
விதிக்கு கர்மா என்றொரு பெயரும் உண்டு. அவரவர் வாழ்வின் அதிர்ஷ்டத்திற்கும், துரதிஷ்டத்திற்கும், அவரவர்கள் செய்த வினைப் பயனே காரணம்.
இதை ‘‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’’ என்ற சங்க இலக்கியப் பாடல் வரிகளால் தெரிந்து கொள்ளலாம்.
சிலப்பதிகாரம் மூன்று மையக் கருத்துக்களை முன்வைத்து இயற்றப்பட்ட காப்பியம்.
1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
3. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்.
இதில் முதல் இரண்டு கருத்துக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.
அரசியல் பிழைத்தல் என்று சொன்னால், விதி மீறல் செய்தல் என்று பொருள்.
பாண்டியன் நெடுஞ்செழியன், குற்றம் சுமத்தப்பட்ட ஒருவனை எப்படி விசாரிக்க வேண்டுமோ அப்படி விசாரிக்காமல், அரசியல் விதிகளை மீறி, தன்னுடைய அபிலாஷைகளுக்கு இணங்கி, அவசரப்பட்டு ஒரு செயலைச் செய்து விட்டான்.
இது வினை. (action) அந்த வினையேஅவனை தண்டிக்கிறது. இது எதிர்வினை (Reaction).
இங்கே அறம் கூற்றம் ஆகியது என்று சொன்னால் வினையின் விளைவைச் சந்தித்தான் என்று பொருள்.
இந்த வினையின் விளைவுதான், எதிர்வினையாக (விதியாக) வந்து தலையில் விழுகிறது.
இங்கே முதல் வரியான அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், என்ற வரியையும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதையும் இணைத்துப் பார்த்தால், விதியின் பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதனால் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து குழப்பம் அடைகிறோம்.
ஏன் இப்படி நடக்கிறது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
இந்த ஊரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
காரணமில்லாமல் காரியமில்லை.
வினை இல்லாமல் எதிர்வினை இல்லை.
இந்த வினையின் விளைவு தான் விதி.
இது நமக்குப் புரிவதில்லை.
இதை மிக எளிதாக நம்முடைய கிராமத்து மக்கள் புரிந்து கொண்டு பழமொழிகளைச் செய்திருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் அவர்களுடைய கல்வியை விட அனுபவம் அற்புதமாக இருக்கிறது.
சில வழக்கு மொழிகளைப் பார்ப்போம்.
1.வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா? - நோய்க்கு மருந்து இருந்தாலும், விதியை (கர்மவினையை) மாற்ற முடியாது அல்லது அதற்கான தீர்வு இல்லை என்பதை இக்கருத்து உணர்த்துகிறது.
2.வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.
3.வருவது வந்தே தீரும்.
4. வருவது வழியிலே தங்காது.(ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்) விதியைப் புரிந்து கொண்டால், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளலாம். புரிந்து கொண்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும்.