இறைவனை நாம் வழிபாடு செய்கின்ற போது, இறைவனுக்கு செய்யக் கூடிய பூஜை வழிபாட்டு முறைகளை பற்றி, நமக்கு நம் முன்னோர்கள் ஒரு நெறிமுறையை வகுத்து தந்திருக்கிறார்கள். அந்த வகையில், வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கோ அல்லது விக்ரகங்களுக்கோ நாம் தூபம் - தீபம் செய்த பின்னர் அதாவது தூபம் என்பது சாம்பிராணி ஆகும். அதை ஸ்வாமிகளுக்கு ஆராதித்தபின்னர், நிவேதனம் செய்வதற்கு முன்னர், தீபம் (3 திரிபத்தியால் ஸ்வாமிகளுக்கு தீபம் காட்டவேண்டும் அல்லது ஒரே ஒரு சூடத்தை பொருத்தி ஸ்வாமிகளுக்கு ஆராதிக்கலாம்) செய்ய வேண்டும். அதன் பின் நைவேத்தியம் (நிவேதனம்) என்னும் முக்கிய வழிபாட்டு முறை உண்டு.
ஆலயங்களில், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் செய்யப்பட்டு, அதனை நிவேதனம் செய்து, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு; திருப் பதியில் லட்டு பிரசாதம் என்கின்றோம், பழனி முருகனுக்கு பஞ்சாமிர்தம் இப்படி நிவேதனம் என்பது ஒவ்வொரு ஊலும் பிரபலம்.சரி.. கோயில்களுக்கு போனால் இத்தகைய நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன.
வீட்டில் எப்படி நிவேதனம் செய்வது? குறிப்பாக, எந்த பதார்தங்களைக் கொண்டு நிவேதனம் செய்வது? என்கின்ற குழப்பத்திற்கு விடையளிக்கிறது, இந்த தொகுப்பு.காலையில், அவரவர்களுக்கு ஏற்றால் போல் நேரத்தில் எழுந்து (குறைந்தது 6.00 மணிக்குள் எழுவது உசிதம்) முதலில் வீட்டுவாசலை தண்ணீரால் தெளித்து, கோலமிட்ட பிறகு, குளித்துவிட்டுததான் சமையல் செய்யவேண்டும். அதுதான் சாலச் சிறந்தது. இது ஒரு பக்கமிருக்கட்டும், தினமும் கோயிலில் நடைபெறுவதுபோல் வீட்டில் நிவேதனம் செய்ய முடியுமா? என்கின்ற கேள்வி எழலாம்.
நிச்சயமாகத் தினமும்வீட்டில் உள்ள ஸ்வாமிகளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். கோயிலில் செய்வதுபோல் சக்கரைப் பொங்கல், புளிசாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், லெமன் சாதம், அக்காராடைசல் போன்றவற்றை வீட்டிலும் செய்ய முடியுமா? என நீங்கள் நினைக்கலாம். இன்ன சின்னா நிவேதனம்தான் எனக்கு நிவேதனம் செய்ய வேண்டும் என்று நம்மிடத்தில் பகவான் கேட்கவில்லை. மிக சுலபமான முறையிலேயே நிவேதனம் தயாரித்து, இறைவனுக்கு நிவேதிக்கலாம். அதைர்பற்றிப்பா ப்போம்.
அதற்கு முன்னர், நாம் ஏன் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்? என்பதனைப்பற்றி சற்று தெரிந்துகொள்வோம். சில நபர்கள் செவ்வாய் - வெள்ளி நிவேதனம் செய்தால் போதுமா? சனிக்கிழமை செய்தால் போதுமா? விசேஷ நாட்களில் செய்தால்போதுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள்.இப்போது, நம் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த விருந்தினருக்கு எப்படி உபச்சாராம் செய்வோம்? அந்த விருந்தினருக்கு எத்தனை வேளை சாப்பாடு கொடுப்போம்? குறைந்தது நாம் சாப்பிடும் மூன்று வேளை சாப்பாடாவது வந்திருந்த விருந்தினருக்குக் கொடுக்க வேண்டும் அல்லவா! அப்படி இல்லையென்றால் ஒரு வேளையாவது வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் தானே!... அப்போதுதான் ``அதிதி தேவோ பவ’’ என்னும் வார்த்தைக்கு ஒரு பொருள் கிடைக்கும்.
ஒரு விருந்தினருக்கே இத்தகைய உபச்சாரங்கள் என்றால், கடவுளுக்கு..?! ஆக, தெய்வத்தை நாம் நம் வீட்டில் வைத்திருக்கிறோம். அந்த தெய்வம், எந்த ரூபத்தில் இருந்தாலும் சரி.. உதாரணத்திற்கு; சிலை ரூபமாக இருந்தாலும் சரி, படங்களை வைத்து வழிபடுவதாக இருந்தாலும் சரி, நமக்கு அது தெய்வம் அல்லவா..!அப்படி, அந்த தெய்வத்தை வழிபடுகின்ற பொழுது,தினமும் நிவேதனம் செய்வதுதானே சரியான முறையாக இருக்கும்.
(அடுத்த இதழில் பார்ப்போம்...)
ஜி.ராகவேந்திரன்