ஒருநாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில். சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுமே இல்லாததால் அவரே கழற்றி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.
நான்கு போல்ட்டையும் கழற்றி வைத்து விட்டு ஸ்டெப்னி எடுத்து வரச் சென்றார். ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி நான்கு போல்டுகளும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விட்டது. எப்படி எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏதாவது பிரச்சனையா என்று டிரைவர் ஒருவர் கேட்டார். அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனையின் நோயாளி. இவர், எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.
உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை கழட்டி, இந்த சக்கரத்தில் மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார். இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமனையில் என்று கேட்டார். இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார் மனநல நோயாளி. இறைமக்களே, ஒருவருடைய தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள். ‘‘தோற்றத்தின்படி தீர்ப்புச் செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள்” (யோவான் 7:24) என இறைமகன் இயேசு கிறிஸ்து தம் திருவாய் மலர்ந்து கூறியுள்ளார்.
- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்