அம்பிகையே.. வருக.. அருள் மழை பொழிக!
``குழையைத்தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்புவில்லும்
விழையைப் பொருதிறல்வேரியம் பாணமும், வெண்ணகையும்
உழையைப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே’’.
- நூறாவது அந்தாதி
இந்தப் பாடலை பொறுத்தவரை மனதிற்குள் உமையம்மை தோன்றி அருள் புரியும் போது உள்ள உள் உணர்வை பதிவு செய்கிறார் பட்டர். ‘உதிக்கின்ற’ என்று அபிராமி அந்தாதியில் முதல் பாடலை ஆரம்பித்த பட்டர் கடைசி பாடலில் ‘உதிக்கின்றதே’ என்று முடிக்கிறார். உமையம்மையின் அருளைப் பெற தன் முயற்சியும், இறையருளும், அதைப் பெற சரியான நெறியும், மிகவும் முக்கியம் என்பதை நமக்கு நடுவிலுள்ள பாடலின் வழி அறிவித்த அபிராமிபட்டர் அதை ஆலோசித்ததினால் (பழக்கத்தினால்) உமையம்மையை இதயத்தில் நிறுத்தி அவளது உருவத்தை அதில் உள்ள உறுப்புகளை கையில் பிடித்து இருக்கும் ஆயுதங்களை, அவரது குணங்களை முன்னால் அவள் யார் யாருக்கு அருள் செய்தார் என்கின்ற பதிவை சாத்திரங்களின் வழியும், புராணங்களின் வழியும், அவ்வழியே தியான முயற்சி செய்து அதன் பயனாய் உமையம்மைஉள்ளத்தில் காட்சியளிக்கிறாள். அதை அவர் பார்க்கிறார். இது அக காட்சியே அப்படி தன் உள்ளத்தில் பார்க்கிறார் என்பதை பதிவு செய்கிறார். அதை இனி இப்பாடலில் காண்போம்.
“அந்தாதி பொருட்சொல் வரிசை”
* குழையைத் தழுவிய
* கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
* கழையைப் பொருத திருநெடுந் தோளும்
* கரும்பு வில்லும்
* விழையைப் பொருதிறல்வேரியம் பாணமும்
* வெண்நகையும்
* உழையைப் பொருகண்ணும்
* நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.
“குழையைத் தழுவிய”
என்பதனால் இருபத்தி எட்டாவது பாடலில் தனது வைரக் குழையான தோட்டை [காதணியை] உமையம்மை வீசி எறிந்து அருள்புரிந்து அமாவாசையை பௌர்ணமி ஆக்கியதால் நிலவு என்பது தெளிவாக அவர் உள்ளத்தில் தெரிகிறது. புவனம் பதினான்கையும், பூத்த உமையம்மையானவள் ஒரு சிறு துரும்பு போன்ற தனக்காக நேரில் வந்து அருள் செய்து ஆட்கொண்ட அடையாளம் முதலில் மனதில் தோன்றுகிறது. அது தோன்றியதால் ஆசை கடல் மறைந்து போனதையும் பதிவு செய்கிறார்.
“தழுவிய” என்ற வார்த்தையால் சிவன் இருப்பதை நமக்கு மறைமுகமாகவே உணர்த்துகிறார். முதல் பாடலுக்கு முன்னதாகவே ‘தாரமர் கொன்றையும், செண்பக மாலையும், சாத்தும் தில்லை ஊரர்’ - காப்பு என்று குறிப்பிட்டிருப்பதனால். தழுவியது தில்லை ஊரரையே என்பதை நாம் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறார். இதிலிருந்து ஸ்ரீவித்யா உபாசனையில் சிவனும் சக்தியும் ஒருவரை ஒருவர் தழுவிய நிலையில் இருக்கும் தோற்றத்தை சிற்பசாஸ்திரம் காமேஸ்வர காமேஸ்வரி என்கிறது. இருவரும் ஒத்த ஆயுதத்தை கொண்டவராய் ஒத்த குணத்தை கொண்டவராய் இருக்கும் வடிவத்தைக் கொண்டு நன்கு உணரலாம் ‘புல்லிய மென்முலை’ (91) என்பதையே பட்டர், “குழையைத் தழுவிய” என்கிறார்.
``கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி’’
கொன்றை சூடிய சிவபெருமான் என்று கூறுவதை ``தார் கமழ் கொன்றை’’ எனலாம். ``தார்’’ என்பது வண்டு. காப்பில் ``தார் அமர் கொன்றை’’ என்றும் இதையே குறிப்பிட்டுள்ளார். வண்டு மொய்ப்பதனால் மகரந்த சேர்க்கையை குறித்தார். இது குறித்து சிவசக்தியின் இணை பிரியா தன்மையை நமக்கு சூட்ட சிவபெருமான் மீது இருந்த கொன்றை மலரின் வாசம் உமையம்மையின் கொங்கையில் வீசியது என்று சுட்டுகிறார். இதை ஸ்ரீ சக்கர உபாசனையில் ஸ்ரீ சக்ரத்தில் கீழ்நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் சக்தி, மேல் நோக்கிய முக்கோணம் நான்கும் சிவம் என்கிறது தந்திர சாஸ்திரம்.
ஒன்றோடு ஒன்று இணைந்தால் மட்டுமே இந்த நாற்பத்தி மூன்று முக்கோணங்கள் தோன்றும். இவை எழுத்து வடிவானவை. இவையே உமையாக கருதப்படுகிறது. சக்தி பீடங்களாக திகழ்வதும் இவையே. த்ரிபுரா இரகஸ்யம் என்று தந்திர சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. உபாசகனுக்கு வெளியில் அருவமாக காணமுடியாது ‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாமல்’ (87) இருக்கும் உமையம்மையானவள் இத்தகைய தியானத்தால் உருப்பெற்று உபாசகனுக்கு மட்டும் நன்கு விளங்கி தோன்றுவாள். என்பதையே முடிவில்
``கொன்றையந் தார் கமழ் கொங்கை’’என்கிறார்.
``கழையைப் பொருத திருநெடுந் தோளும்’’
``கழை’’ என்பது மூங்கிலையும், ``பொருத’’ என்பதனால் ஒத்த பண்பையும் உடைய ``திரு’’ உயர்ந்த ``நெடுந்தோளும்’’ நீண்ட தோளும் என்பதனால் கைகளையும் குறித்தது. மூங்கிலின் வடிவத்தை ஒத்த என்ற உவமையை குறிப்பிட்டார். மேலும், உமையம்மை பச்சை நிறம் கொண்டவள் `பச்சை வண்ணமும்’ (70) மூங்கிலும் பச்சை வண்ணம் கொண்ட கணுவை உடையது. உமையம்மை தோள், மணிக்கட்டு என்ற உறுப்பை கொண்டவள். மேலும், மூங்கில் உள்ளீடற்ற வெற்றிடத்தை கொண்டது. உமையம்மை ‘பரமே வ்யோமன்னு’ என்ற வேத வாக்கின்படி ‘வெளியே’ (82) இருப்பவள் [வெற்றிடம்] மூங்கிலின் அடிப்பாகம் மொத்தமாக இருந்து நுனிக் குறுகும்.
அதுபோலவே, சிற்பசாஸ்திரம் உமையம்மையை வடிக்கும் பொழுது மூங்கிலை மனதில் கொள்ள வேண்டும் என்கிறது. உமையை வடிக்கும் பொழுது தோள், மணிக்கட்டு சிறுத்து இருக்க வேண்டும் என்ற சிற்ப விதியினால் நன்கு அறியலாம். ``தோள்’’ என்று குறிப்பிடாமல் ``நெடுந்தோள்’’ என்று குறிப்பிடுகிறார். சாமுத்திரிகா லட்சண சாஸ்திரமானது நீண்ட தோள்களை உடையவர்கள் வற்றாத செல்வத்திற்கு சொந்தக்காரர்களாகவும், கொடை பண்பினால் மகிழ்ச்சி அடைபவர்களாகவும் இருப்பார் என்கிறது.
அந்தப் பண்பை வலியுறுத்தவே ``திரு நெடுந்தோளும்’’ என்கிறார். ``திருநெடுந்தோளும்’’ என்பதனால் சிவபெருமானின் உருவங்களில் நடராஜருக்கும் காமேஸ்வரனுக்கும் இவ்வாறான உநெடுந்தோள் அமைந்திருக்கும். இப்பாடலைப் பொருத்தவரை உமையம்மையை போல ஒத்த பண்பையும் ஒத்த ஆயுதத்தையும் ஒத்த வடிவத்தையும் கொண்டதால் முன்னால் ஒரு ``திரு’’ சேர்த்து ``திரு நெடுந்தோள்’’ என்று சிவசக்தி இருவரையும் சேர்த்து ஒரே சொல்லால் சாத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதையே “கழையைப் பொருத திருநெடுந் தோளும்’’ என்கிறார்.
``கரும்பு வில்லும்’’
கரும்பு மன்மதனின் ஆயுதமாகும். உலகத்தின் படைப்பில் உறுதுணையாய் இருக்கும். ஆக்க சக்திக்கு அடிப்படையாய் இருப்பது காமம் என்ற உணர்வு. இந்த உணர்வை ஒரு வடிவமாக அமைத்து அதற்கு மன்மதன் என்பதாக குறிப்பிடுகிறது, சாக்தம். இவன் பெயர் காமன் அபிராமிபட்டர் அந்தப் பெயரை ‘காமன்....’ (97) என அப்படியே பயன்படுத்துகிறார். சிற்ப சாத்திரம் அவன் கையில் கரும்பை வில்லாகவும் வண்டுகளை நாணாகவும் தாமரை, அசோகம், அல்லி, மல்லிகை, மாம்பூ போன்ற மலர்களையே அரும்புகளாகவும் வசந்தம் என்ற காலத்தையே சேனாபதியாகவும் ரதியினை துணையாகவும் கொண்டவனாக அவன் உருவத்தை அமைக்க வேண்டும் என்கிறது.
மேலும், இவன் அபிராமி அம்மையின் மிகச் சிறந்த உபாசகன் ஆவான். ரதவீதியில் இறைவனுக்கான கோயிலும் அமைக்கப்பட வேண்டும் என்கிறது. சாத்திரம் - உழவர்கள் இவனுக்காக விழா எடுத்து சிறப்பிப்பர். இவனை வணங்குவதனால் பயிர் வளம் பெருகும் இவனை தகனம் செய்ததையே ‘தகனம் முன் செய்த தவப் பெருமாற்கு’ (65) என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார். காதிவித்யா என்பது மன்மதன் உமையை வழிபட உருவாக்கிய வித்தையாகும்.
சிவபெருமானால் எரிக்கப்பட்ட இவன் ரதியின் வேண்டு கோளுக்கிணங்கி மீண்டும் சிவபெருமான் திருமணத்தன்று ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் வண்ணம் பிறருக்குத்தெரியாத வண்ணம் அனங்கன் என்ற பெயருடன் மீண்டும் உயிர் பெற்றான். அவனுக்கான ஆயுதமான கரும்பையும் வண்டான நாணயும் பஞ்ச பாணத்தையும் கொண்டே மன்மதனின் இருப்பை உணர்ந்து கொள்ள முடியும். இவன் சேவையை ஏற்ற பிறகே ஸ்கந்தன் தோற்றுவிக்கப்பட்டான் என்கிறது தல புராணம். மன்மதனின் சேவையை ஏற்றுக்கொண்ட திருக்கோலத்தை இப்பாடலில் முழுவதுமாய் விளக்குகிறார் பட்டர். அந்த அடிப்படையிலேதான் இங்கே `கரும்பு வில்லும்’ என்கிறார்.
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்