Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் கிளைக்கோமா நோயாளிகளுக்கு நாளை மறுநாள் சிறப்பு மாநாடு

சென்னை: சென்னை டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையில் நாளை மறுநாள் கிளைக்கோமா நோயாளிகளுக்கான சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் அஷ்வின் அகர்வால் அளித்த பேட்டி: கிளைக்கோமா என்பது கண் நோய்களின் ஒரு பிரிவு. இது பார்வை நரம்பு எனப்படும் கண்களின் பின்புறத்தில் உள்ள நரம்பை சேதப்படுத்துவதன் மூலம் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாகத் தொடங்கும், இதனால் நோயாளிகள் கவனிக்க மாட்டார்கள். ஒரு நபருக்கு கிளைக்கோமா இருக்கிறதா என்பதைக் கண்டறிய விரிவான கண் பரிசோதனை செய்வது தான் ஒரே வழி. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, நாளை மறுநாள் கிளைக்கோமா நோயாளிகள் மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்தியாவின் முன்னணி கண் மருத்துவர்கள் மற்றும் கிளைக்கோமா நிபுணர்கள் உரையாற்ற உள்ள இந்த மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் பங்கேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்கும், தொலைதூரத்தில் இருந்து நோயாளிகள் பங்கேற்கவும் நாடு முழுவதும் உள்ள அமையங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதிகளை நிறுவுகிறது. இதில் பங்கேற்பதற்கு நோயாளிகள் https://www.dragarwal.com/glaucoma-patient-summit/ என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 9594901868 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், கிளைக்கோமா கண் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்.

மீளமுடியாத பார்வை இழப்புக்கு மிகவும் பொதுவான காரணம் கிளைக்கோமா. உலக அளவில் 80 மில்லியன் மக்கள் இந்த நிலையில் உள்ளனர். 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் கிளைக்கோமா பாதிப்பு தோராயமாக 3-5 சதவீதம் ஆகும். இந்தியாவில், இது கண்புரை மற்றும் ஒளிவிலகல் பிரச்னைக்குப் பிறகு பார்வை இழப்புக்கு மூன்றாவது முக்கிய காரணம். தற்போது, நாட்டில் 12 மில்லியன் கிளைக்கோமா நோயாளிகள் உள்ளனர். இந்த நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடித்தால் சிகிச்சை மற்றும் வழக்கமான சோதனைகள் மூலம் பார்வை இழப்பை குறைக்க அல்லது தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.