பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும் கர்நாடகாவின் ஹாசன் தொகுதி மஜத முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இது தொடர்பாக எஸ்.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த 14 மாதங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டின் இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 123 ஆதாரங்களைச் சேகரித்து சுமார் 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எஸ்.ஐ.டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கில், அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்ததில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்பது நிரூபணமானதாகக் கூறி அவரை குற்றவாளி என்று அறிவித்து மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாளை (இன்று) தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.