Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி நாடகமாடுவார்

சேலம், நவ.28: ஒடிசா, பீகாரில் தமிழர்களை இழிவாக பேசிவிட்டு இப்போது பாராட்டி பேசும் பிரதமர் மோடி, தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நாடகமாடுவார் என காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ஷோபா ஹோஜா கூறினார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில், அமைப்பு மறுசீரமைப்பு மேற்கொண்டு, புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்வது குறித்த கருத்து கேட்பு மற்றும் விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று, சேலம் முள்ளுவாடிகேட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மேலிட பார்வையாளரான முன்னாள் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி ஷோபா ஹோஜா தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர், துணைமேயர் சாரதாதேவி, மாநில துணைத்தலைவர் ராமசுகந்தன், மாநகர் மாவட்ட பொருளாளர் தாரை.ராஜகணபதி முன்னிலை வகித்தனர். 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை வழங்கினர்.

கூட்ட முடிவில் மேலிட பார்வையாளர் ஷோபா ஹோஜா நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரசில் மாவட்ட கமிட்டிகளை அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பு செய்யும் பணி தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தற்போது நடக்கிறது. ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து பேசுகிறேன். கட்சிக்கு வலு சேர்க்கும் வகையிலும், கட்சியை வளர்ச்சியடைய செய்யும் வகையிலும் செயல்படும் நபர் மாவட்ட தலைவராக நியமிக்கப்படுவார். இதற்காக விண்ணப்பம் வழங்கும் நபர்களில் இருந்து 5 பேரை தேர்வு செய்து, கட்சி தலைமைக்கு வழங்குவேன். அதில் இருந்து ஒருவரை மாவட்ட தலைவராக நியமிப்பார்கள். தமிழ்நாட்டில் 58 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும், காங்கிரஸ் உயிர்ப்போடு இருக்கிறது. களத்தில் பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இந்த அமைப்பு மறுசீரமைப்பு நல்ல முறையில் வேலை செய்கிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் மறுசீரமைப்பு முன்னேற்றத்தை தரும். ஒவ்வொரு நாளும் மாவட்ட தலைவர் கட்சிக்காக உழைக்க வேண்டும்.

இதற்காக தலைமை பயிற்சி அளிக்கும்.இந்த மாவட்ட தலைவர் நியமனத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மகளிர் இடஒதுக்கீடு வழங்கப்படும். ஒடிசா, பீகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய பிரதமர் மோடி, இப்போது தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரும்நிலையில் உத்திரமேரூர் கல்வெட்டு பற்றி பேசியிருக்கிறார். அவர், தேர்தலுக்காக பாசாங்கு செய்து, தமிழர்களை உயர்த்தி பேசுகிறார்.இது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அவர் நடத்தும் நாடகம். படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை, ஊழல் பெருகிவிட்டது. இதை பற்றி பிரதமர் பேசட்டும் பார்க்கலாம். தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது. அத்தகைய தேர்தல் ஆணையம், விசாரணை அமைப்புகளை கையில் வைத்து கொண்டு, பாஜ ஆட்டம் போடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.