பெரம்பலூர், ஆக.9: பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பயன்படுத்திய வாகனங்கள் வரும் 14ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது என எஸ்பி ஆதர்ஷ் பசேரா தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு, அதன் காரணத்தால் மதுவிலக்கு அமல் சட்டம் பிரிவு 14(4) பிரகாரம் கைப்பற்றப்பட்டுள்ள 40 இருசக்கர வாகனங்கள், ஒரு 4 சக்கர வாகனம், 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டும் அவற்றிக்கு வாகனங்களில் விலை பெறப்பட்டுள்ளது.
மதிப்பீடு உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்படும் வாகனங்கள் தவிர்த்து மீதமுள்ள வாகனங்கள் அனைத்தையும் வரும் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல், பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி, பொது ஏலத்தில் விட்டு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை பொது ஏலத்தில் பெற்றுக்கொள்ளும் நபர்கள் அந்த வாகனங்களின் ஏலம் எடுத்தத் தொகையின் மதிப்புடன் கூடுதலாக 18சதவீதம் வரியுடன் உரிய மொத்தத் தொகையினை, ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் எடுத்த உடனே மொத்த தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.
வாகனங்களை பொது ஏலததில் எடுக்க உத்தேசிக்க உள்ளவர்கள் வருகிற 11, 12 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது ஆதார் கார்டு நகலுடன் ரூ500ஐ முன் பணமாக செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டு அதன் பின்னர் 14 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு மேல் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.
டோக்கன் பெற்றுக்கொள்ளாத நபர்கள் பொது ஏலத்தில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்க இயலாது என்பதையும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்புக்கு 7904136038, 9498162279, 9787658100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல்விவரங்களை அறிந்து கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


