Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவ மழை காரணமாக பயிர் சேதங்களை கணக்கிட கண்காணிப்பு குழு அமைப்பு

ஊட்டி, டிச.12: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பயிர்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணிக்க வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது, ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி வடகிழக்கு பருவ மழை காரணமாக பயிர்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணித்திட மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை அலுவலர்களால் வருவாய்த் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச்சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைகாலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். பூச்சிஇ நோய் தாக்குதலைத் தொடர்ந்து கண்காணித்து, பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், பசுந்தாள் உரப்பயிர்களை அதிக அளவில் பயன்படுத்தி, யூரியா, டிஏபி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவலர்களுக்கு தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயிர்பாதுபாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

தோட்டக்கலைப்பயிர்களில் செடிகள், மரங்களைச் சுற்றி மண் அணைத்தல் ஊன்றுதலுக்கான குச்சிகளை நட்டுக் கட்டுதல், வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்லாண்டுப் பயிர்களில் அதன் தலைப்பகுதியின் சுமையை (மட்டை, ஓலை) குறைத்து காற்றின் வேகத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். பசுமைக்குடில், நிழல்வலைக்குடில்களில் அதன் அடிப்பாகத்தை நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும்.

சூரிய சக்தியினால் இயங்கும் பம்பு செட்டுகளில் சோலார் பேனல்கள் அகற்றப்பட அல்லது அதன் சாய்வு கோணத்தினை ‘0’ ஆக மாற்றி வைக்க வேண்டும். சூரிய சக்தி மின் வேலி அமைப்பின் சுவிட்சினை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.