சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாலும், தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையிலும் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை என்றும் அதனால், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தேர்வை தள்ளி வைத்தால் அது தேர்வில் பங்கேற்போருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாதிட்டார். அரசு தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தேர்வை தள்ளி வைக்குமாறு உத்தரவிட முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.