அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு முன்வைப்பு தொகை வசூல் குறித்து விதிகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முன்பு அரசியல் கட்சிகளிடம் முன்வைப்பு தொகை வசூலிப்பது குறித்து விதிமுறைகள் வகுக்க அக்டோபர் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலித்து, அனுமதி வழங்க காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி த.வெ.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற நிகழ்வுகளில் பொதுச்சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்த பின் அனுமதி வழங்கும் வகையில் விதிமுறைகளை வகுப்பது குறித்து பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்கூட்டியே டெபாசிட் வசூலிப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். அதற்கு அவகாசம் வழங்க வேண்டும். சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறும் முன்பு டெபாசிட் வசூலிக்க எந்த சட்டமும் வழிவகை செய்யவில்லை. சம்பவம் நடந்த பிறகு தான் இழப்பீடு வசூலிக்க முடியும் என்று தெரிவித்தார்.
அவகாசம் கோரி டிஜிபி ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதுவரை எத்தனை வழக்குகளில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது?. முன் வைப்புத் தொகை வசூலிக்க சட்ட விதிகள் ஏதும் தேவையில்லை. மனமிருந்தால் போதும். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் முன்பு வருவாய் கோட்டாட்சியரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தக் கூறலாம். நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பப் பெறலாம்.
ஏதேனும் சேதம் வந்தால் அந்த தொகை மூலம் இழப்பீடு வழங்கலாம். இந்த வழக்கில் தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும் தாமாக முன் வந்து எதிர்மனுதாரர்களாக இந்த நீதிமன்றம் சேர்க்கிறது. முன் வைப்பு தொகை வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க அரசுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.