2வது சீசன் தொடங்கிய நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டியில் மலர் செடிகள் பராமரிப்பு
ஊட்டி: இரண்டாவது சீசன் துவங்கிய நிலையில், தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2வது சீசன் அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசன் போன்று மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை என்றாலும், பூங்கா முழுவதும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் அவைகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்களை பராமரிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 15 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, உரம் இட்டு பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான செடிகளில் தற்போது மொட்டுக்கள் காணப்படுவதால் இம்மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் பெரும்பாலான செடிகளில் மலர்களை காண முடியும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.