Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடரும் பருவமழையால் பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 1,200 கன அடி நீர்வரத்து

பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் தென்மேற்கு பருவமழையால், பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,200 கன அடியாக உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி டாப்சிலிப் அருகே உள்ள பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், சர்க்கார்பதியில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில், மின்உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணை மற்றும் ஆழியார் அணைக்கு செல்கிறது.

ஆனால்கடந்த ஜனவரி முதல் மே மாதம் 2வது வாரம் வரை மழை குறைவால், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்தது. மேலும், சில நாட்கள் கோடை மழை இருந்தும், அந்நேரத்தில் அணைக்கு தண்ணீர் வரத்து என்பது எதிர்பார்த்த அளவில் இல்லை.

இதன் காரணமாக மொத்தம் 72 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் வாரத்திற்கு முன்பு வரை 25 அடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் பெய்த கன மழையின்போது பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பரம்பிக்குளம் பகுதியில் மழை சற்று குறைவாக இருந்தாலும் நேற்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.